பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு சாலையில் கட்டப்பட்ட கயிறு.. இளைஞரின் கழுத்தில் சிக்கி.. சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக சாலையில் தடுப்பாக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, தவறி விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்..
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு கொச்சிக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். பிரதமர் வருகையையொட்டி கொச்சி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி எர்ணாகுளத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.
கொச்சி நகரில் எம்.ஜி. சாலை அருகே உள்ள பள்ளிமுக்கு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் சாலையில் செல்லக்கூடாது என்ற நோக்கில் சாலையின் குறுக்கே போலீசார் கயிறு கட்டி இருந்தார்கள். இந்தநிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த வழியாக எர்ணாகுளம் வடுதலா பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மனோஜ் உண்ணி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். வேகமாக வந்த அவர், சாலையின் குறுக்கே கட்டியிருந்த கயிறை கவனிக்கவில்லை...
இதனால் மனோஜ் உண்ணியின் கழுத்தில் கயிறு சிக்கி இறுக்கியது. மேலும் அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் உண்ணி இறந்துபோனார்.
மனோஜ் உண்ணி இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த போது கயிறு கட்டி இருப்பதால் செல்ல வேண்டாம் என்று போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. , ஆனால் ஸ்கூட்டரை நிறுத்தாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே எர்ணாகுளம் போலீசாரின் அஜாக்கிரதையால் மனோஜ் உண்ணி விபத்தில் சிக்கி இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசார் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகளின் போது, பேரிகார்டகர்ளை வைத்து பாதைகளை அடைக்காமல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கயிறு கட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications