நிலச்சரிவால் உருக்குலைந்த கேரளாவின் வயநாடு.. நாளை மறுநாள் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. 400-க்கும் அதிகமானோரை காவு கொண்ட இந்த நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியாத நிலைமைதான். வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்டவைகள் இனி மனிதர்கள் வாழவே முடியாத சூனிய பிரதேசமாகிவிட்டது. இத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்திய வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சனிக்கிழமையன்று பார்வையிட உள்ளார்.
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. தென்மேற்கு பருவமழை அதி உச்சமாக ஒரே நாளில் 30 செமீ முதல் 40 செமீ மழையையும் கொட்டியது. வயநாடு மாவட்டத்தின் மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் இதேபோல பெருமழை கொட்டித் தீர்த்தது.

இந்தப் பெருமழை இடைவிடாமல் பெய்ததால் வயநாடு மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடிய பகுதிகளில் சில மலைகள் அப்படியே பெயர்ந்து குடியிருப்புகளை புதைத்துவிட்டன. இந்த பயங்கரமான நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. வீடுகள், கட்டிடங்கள், தேயிலைத் தோட்டங்கள் அங்கே இருந்தன என்பதற்கான சுவடுகள் கூட இல்லை. இந்தப் பேரழிவில் சிக்கி மாண்டு போன 400-க்கும் அதிகமானோர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் 200-க்கும் அதிகமானோர் கதி என்ன என்பது தெரியவும் இல்லை. கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக வயநாடு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த பயங்கர நிலச்சரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்காக கேரளாவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டி உள்ளன. வயநாடு லோக்சபா தொகுதி முன்னாள் எம்பி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வயநாடு துயரத்தை நேரில் பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். அதேநேரத்தில் பிரதமர் மோடி வயநாடு செல்லாதது ஏன் என்கிற சர்ச்சையும் எழுந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு முடிவுகட்டும் வகையில் வரும் சனிக்கிழமையன்று பிரதமர் மோடி வயநாடு மலைப் பகுதிகளுக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைகிறார். பின்னர் மேப்பாடி பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடும் பிரதமர் மோடி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இருப்பினும் பிரதமர் மோடியின் பயணம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications