ராகுலுக்கு பதில் பிரியங்கா காந்தி.. வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று இடைத்தேர்தல்! மும்முனை போட்டி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு பதில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன்மூலம் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் நுழைந்துள்ளார். இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
2024 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். நம்நாட்டை பொறுத்தவரை ஒருவர் 2 தொகுதிகளில் மக்கள்பிரதிநிதியாக இருக்க முடியாது.

இதனால் ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ராகுல் காந்தி ரேபரேலி எம்பியாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு பதிலாக அவரது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி(எல்டிஃஎப்) சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகரி களமிறங்கி உள்ளார்.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைய வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கேரளா போலீசார், சிஆர்பிஃஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications