கேரளாவில் ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மீதே.. கடுமையான பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி தான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அங்கு மார்க்சிஸ்ட் ஆதரவு மாணவ அமைப்பினரால் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் சங்கத்தினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் என்ன நடந்தது. போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பது ஏன் என்று பார்ப்போம்.
கேரளா மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் காவல் அதிகாரியாக (சிவில் துறை) மிதுன்ராய் என்பவர் பணியாற்றி வருகிறார். காவல் அதிகாரி மிதுன் ராய் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கோவளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்தவர் சிலரை கண்டித்துள்ளாராம். அப்போது புத்தாண்டு நிகழ்வின் போதே, காவல் அதிகாரி மிதுன் ராய்க்கும், மார்க்சிஸ்ட் ஆதரவு மாணவ அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இந்தநிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் ஒரு மாலில் மிதுன்ராய் தனது சகோதரியுடன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது கோவளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த 4 பேர் அவரை தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலானது.
திருவனந்தபுரத்தின் கோவளத்தில் நடந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாக அந்த அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெருக்கடி காரணமாக, மாணவ அமைப்பினரால் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மிதுன்ராய் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில் மாணவர் பெருமன்றத்தினர் மீது சாதாரண பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு கேரள போலீஸ் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முற்போக்கானவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் இந்த சம்பவம் அதிர்ச்சியூட்டும் வகையிலும், அவமானகரமாகவும் உள்ளதாகவும் கேரள போலீஸ் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இதுபோன்று அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினர் நடத்தி வரும் தாக்குதலையும் பட்டியலிட்டிருக்கிறது.
மேலும் எதிர்க்கட்சி தலைவரான வி.டி.சதீசன், உள்துறை மற்றும் மாநில அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் ஒரு போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது ஆளுங்கட்சியின் அத்துமீறலை காட்டுகிறது என்றும் வி.டி.சதீசன் கூறியுள்ளார். அதே சமயத்தில் மாணவர் பெருமன்றத்தினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதனை பார்க்கும் போது, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கேரளாவில் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்றும் குற்றச்சாட்டினார். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications