முட்டைக்குள்ளிருந்து குபீர்னு வந்த புழு.. கிறுகிறுத்து கீழே விழுந்த மாணவர்கள்.. மீண்டும் கேரளாவில் ஷாக்
இந்த ஓட்டல் ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்தது. இதனையடுத்து இரண்டு முறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர்.
திருவனந்தபுரம்: இடுக்கியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட முட்டையில் புழு நெளிந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டல் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி மேலெழுந்திருக்கிறது. அதற்கேற்றவாறு உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிரடியான சோதனைகளில் இறங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் அதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 21 பேர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதேபோல வாழத்தோப்பு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தார். எர்ணாகுளத்தின் வடபரவூர் பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட 68 பேர் உணவு நஞ்சு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அம்மாநிலத்தில் உணவு பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்
இது குறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அதன்படி உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எனில் காலாவதி தேதி கட்டாயம் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு தடைவிதிக்கப்படும். அதேபோல சமைத்த உணவுகளை 2 மணி நேரத்திற்குள் விற்று தீர்த்துவிட வேண்டும். மீறி விற்பனை செய்வதெனில் 60 டிகிரி வெப்ப நிலையில் இதனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.

பரிசோதனை
மேலும், ஓட்டல்களில் பணிபுரியும் நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம் அவசியம் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இவர்களுக்கு ரத்தம், கிருமி தொற்று, தோல் நோய் போன்றவை குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இந்த பரிசோதனை 6 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் தற்போது மற்றொரு சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது. இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் இயங்கி வரும் வாகலாண்ட் எனும் ஓட்டலில் சுற்றுலா வந்த மாணவர்கள் சிலர் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கு இன்று காலை முட்டை மசாலாவும் தோசையும் வழங்கப்பட்டுள்ளது.

முட்டையில் புழு
இதில் இரண்டு மாணவர்களின் முட்டையில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சில மாணவர்கள் இதந்த மசாலாவை சாப்பிட்டு மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்கள் ஓட்டல் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் மாணவர்களை தாக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னை பெரியதான நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டலை பரிசோதித்துள்ளனர்.

புகார்
சோதனையில் ஏற்கெனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஓட்டல் ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்தது. இதனையடுத்து இரண்டு முறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் இதே போன்ற சம்பவத்தில் ஓட்டல் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications