கோவிலுக்கு போனதால் சர்ச்சை.. பஹத் பாசில் - நஸ்ரியா ஜோடிக்கு கிளம்பிய எதிர்ப்பு! பரபரக்கும் கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமண விழாவுக்காக கோவிலுக்கு சென்ற நடிகர் பஹத் பாசில் மற்றும் நஸ்ரியாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ், மலையாளம் உள்பட பல மொழி படங்களில் நடித்தவர் நஸ்ரியா. இவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துள்ளார். பஹத் பாசில் தற்போது பல்வேறு மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பஹத் பாசிலுக்கு என்று தமிழகத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கிய ‛மாமன்னன்' படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், பஹத் பாசில் எதிரியாகவும் நடித்து இருந்தனர். இதில் பஹத் பாசில் நடிப்பை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியிருந்தனர்.
பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தான் தற்போது அவர்கள் கோவிலுக்கு சென்றது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. அதாவது மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக இருப்பவர் சுஷின் ஷ்யாம். இவரது திருமணம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பனித்தூரா ஸ்ரீ பூர்ணத்ரேஷயா கோவிலில் நடந்தது.
இந்த திருமண விழாவில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். பஹத் பாசில் - நஸ்ரியா தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் திருமணத்துக்கு பஹத் பாசில் தனது மனைவி நஸ்ரியாவுடன் சென்றார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியான நிலையில் தற்போது பஹத் பாசில் மற்றும் நஸ்ரியாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவர்கள் 2 பேரும் இஸ்லாமியர்கள் என்ற நிலையில் எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என்று வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுபற்றி வலதுசாரி சிந்தனையாளரும், சர்ச்சைக்கு பெயர் பெற்ற வழக்கறிஞருமான கிருஷ்ணராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில், ‛‛இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் செல்வது தவறானது. தண்டனைக்குரியது. இப்போது பெரும்பலான கோவில் நிர்வாகங்கள் பிற மதத்தினர் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க முன்வருவது இல்லை.
இது இந்துக்களின் மாநிலம். இந்துக்கள் தான் கோவிலை நிர்வகித்து வுருகின்றனர். இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைவது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் கோவிலின் பாரம்பரியத்துக்கு சீர்க்குலைக்கும் செயல் ஆகும்'' என தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் கிருஷ்ணராஜின் இந்த பதிவுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications