Vedan: ராப் பாடகர் 'வேடன்' குறித்து அவதூறு! ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையின் ஆசிரியர் கைது! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: தலித் ராப்பராக அறியப்படும் 'வேடன்' எனும் ஹரிதாஸ் முரளிக்கு எதிராக, வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளிப்படுத்தியதாக கூறி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவு பத்திரிகையாக அறியப்படும் 'கேசரி' இதழின் ஆசிரியர் என்.ஆர். மது கைது செய்யப்பட்டிருக்கிறார். இது கேரளாவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் கிழக்கு கல்லடா பகுதியின் சிபிஎம் செயலாளர் வேலாயுதன் இது தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

உள்ளூர் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய என்.ஆர்.மது, வேடன் குறித்து பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, "வேடன் தனது பாடல்கள் மூலம் சாதி அடிப்படையிலான தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார். அவரது பேச்சுக்கள் சாதி குறித்து எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குகிறது. அவர் பரப்ப நினைப்பது நச்சு கலை. நாட்டை துண்டாட நினைப்பவர்கள் இவருக்கு நிதியுதவி செய்கின்றனர்" என்று கூறியிருந்தார்.
இது குறித்துதான் வேலாயுதன் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து மதுவை போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து வேடனின் பாடல்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த பாடல்கள் இந்து சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்துகிறது என்றும், அவரது பாடல்களை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், வேடனின் பாடல்கள் கேரளாவின் சமூக நீதி போராளியாக அறியப்படும் அய்யன்காளி உள்ளிட்டோரின் கருத்துக்களை பரப்புவதாக இடதுசாரிகளும், தலித் செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
என்னதான் வேடனுக்கு இடதுசாரிகள் சப்போர்ட் செய்தாலும், அரவது ஆதரவாளர்கள் இடதுசாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி அரசு, சாதி பிரச்சனைகளை 'அடையாள அரசியல்' என்று ஒதுக்கி வைத்துவிட்டதே தவிர, இதற்கான தீர்வை காணவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தனித்தனி அமைப்புகளை பாஜக, காங்கிரஸ் உருவாக்கியபோது அதை சிபிஎம் விமர்சித்திருந்தது. இப்போது அந்த கட்சி, தங்களுக்கு என தனித்தனி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் சிபிஎம் காலம் நடந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த முட்டல் மோதல்களை தீவிரப்படுத்தும் விதமாக, புலி பல்லை வைத்திருந்தார், போதை பொருளை பயன்படுத்தினார் என்று பல வழக்குகளை மாநில அரசு வேடன் மீது போட்டிருந்தது. இந்த வழக்குகளில் அவரை கைதும் செய்திருந்தது. இதற்கு நடுவே கேசரி' இதழின் ஆசிரியர் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கேரளாவை கடந்து தமிழ்நாட்டிலும் வேடனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்திருக்கின்றன. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வேடனின் பாடல்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications