இரக்கம் காட்டாத இயற்கை! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்? ரஷ்ய அதிபர் புதின் என்ன சொன்னார்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை 270ஐ கடந்திருக்கும் நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்தே வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் நூற்றுக் கணக்காணோர் மீட்கப்பட்டாலும், மேலம் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள தீயணைப்புத் துறையினர், தமிழக மீட்புக் குழுவினர், உள்ளூர் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாலையில் மழை பெய்த நிலையில் தற்போது இருள் காரணமாக மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சூரல்மலையில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டும் பணி மட்டும் தொடருகிறது.
இந்நிலையில், இடைவிடாத பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் தொடங்கி மழை படிப்படியாக குறையும் என கூறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கன மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலச்சரிவு வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் ஏற்கனவே நிலச்சரிவில் சிக்கிய பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வரும் இடங்களில் இருக்கும் மீட்பு குழுவினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் சார்பாக இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அமெரிக்க தூதரகத்தின் தூதரக ஜெனரல் கிறிஸ் ஹோட்ஜஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக, இந்திய அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் துயரமான விளைவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்கவும்.. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. இயற்கை பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications