"சபரிவாசா மகர ஜோதி ரூபா" மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானம்! 14ஆம் தேதி தரிசனம்!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சனிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகர விளக்கு பூஜைகள் தொடங்கப்பட உள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது.
முன்னதாக மண்டல பூஜைக்காக பயன்படுத்தப்படும் தங்க அங்கி பந்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து புறப்பட்டது. 23ஆம் தேதி தொடங்கிய தங்க அங்கி ஊர்வலம் பம்பை வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தங்க அங்கி அணிந்து அருள் பாலித்த ஐயப்பனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில்
தொடர்ந்து சனிக்கிழமை காலை 10.10 மணிக்கு தொடங்கிய மண்டல பூஜை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு மண்டல கால வழிபாடுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் சன்னிதானத்தை சுத்தம் செய்வதற்காக 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சன்னிதானம் நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கோவில் தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் திருநடையை திறந்து வைத்தார்.
மகர விளக்கு பூஜை
தொடர்ந்து சன்னிதானத்தின் ஆழி குண்டத்தில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டு அதிகாலை 3 மணிக்கு மகர விளக்கு பூஜைகள் புதன்கிழமை தொடங்குகிறது. பின்னர் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். இதையொட்டி வழக்கம்போல் பதினெட்டாம் படி வழியாக பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் சபரிமலையில் தற்போது ஆன்லைன் மூலமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான முன்பதிவு பத்தாம் தேதி வரை நிறைவடைந்து விட்டது.
ஐயப்பன் தரிசனம்
சன்னிதானத்தில் பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இந்த எண்ணிக்கை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறியுள்ளது. மண்டல பூஜை மற்றும் அதற்கு முந்தைய நாள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் மகர விளக்கு பூஜையின் போதும் அதற்கு முந்தைய நாளும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே இருக்கும் என்கின்றனர் தேவஸ்தான அதிகாரிகள்.
சபரிமலை ஆன்லைன் புக்கிங்
அதாவது மகர விளக்கு பூஜைக்கு முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் மகர விளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 14-ஆம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் 41 நாட்கள் நடந்த மண்டல பூஜையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் இதர வருவாய் மூலமாக சபரிமலை ஐயப்பன் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 332 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனத்தை ஒட்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் 350 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications