ஐயப்பனை வழிபட பெண்கள் வந்தால் நடையை மூடுவோம்... மேல்சாந்தி மிரட்டல்!
Recommended Video

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்கள் வந்தால் நடையை மூடுவோம் என்று மேல்சாந்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். 10 வயதிற்கும் கீழும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு வரலாம் என்ற நடைமுறைக்கு எதிராக அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது பெண் செயற்பாட்டாளர்கள் 2 பேர் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார். எனினும் போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு அவர் பாதுகாப்புடன் திருப்பி அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கபடுகிறது. இந்த சிறப்பு பூஜையில் பெண்கள் பங்கேற்கக் கூடாது மீறி பெண்கள் வர முயன்றால் போராட்டம் வெடிக்கும் என்று இந்துஅமைப்புகள் எச்சரித்துள்ளன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஐ.ஜி. அஜித்குமாரிடம் மேல்சாந்தி தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை விவரித்துள்ளார். சபரிமலைக்குள் பெண்கள் வர முயன்றால் நடையை மூடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications