சபரிமலை பக்தர்களின் நீண்டநாள் கனவு.. ரயில் பாதை திட்டம்.. முதல்வர் பினராயி எடுக்கும் முக்கிய முடிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில் பாதை திட்டம் தொடர்பாக டிசம்பர் 17 இல் மூன்று மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெறவுள்ளது.
புகழ்பெற்ற ஐயப்பன் திருத்தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம். சிறுவர்கள் முதல் முதியோர் வரை கடும் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கொண்டு வரும் அனைவருக்கும் தரிசனத்துக்கான பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
சபரிமலையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இத்திட்டம் தொடர்பான டிராஃப்டை தயாரித்து மாநில அரசிடம் 392 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 24 ஹெக்டேர் நிலம் மட்டும் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணிக்காக ரூ. 282 கோடி மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் கேரள அரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பணத்தை செலவழிக்க முடியவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முதல்வர் பினராயி விஜயன் முடிவெடுத்துள்ளார்.
அந்த வகையில், வரும் டிசம்பர் 17 ஆம் தேதி கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடத்தவுள்ளார். அங்கமாலி முதல் எருமேலி வரையிலான ரயில் பாதைக்கு 1996 ஆம் ஆண்டில் சர்வே நடத்தப்பட்டு, 1997 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு ரயில் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 111 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த ரயில் பாதையில் 7 கிலோமீட்டருக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள, காலடியில் ரயில் நிலையம் மற்றும் பெரியாற்றின் குறுக்கே ஒரு பாலமும் கட்டப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலரும் நீதிமன்றத்தை நாடியதால் கோட்டயம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
இதனால், ரயில்வே திட்ட மதிப்பீடு அதிகரித்துக் கொண்டே போனது. மொத்த செலவில் 50 சதவீதத் தொகையை மாநில அரசு செலுத்த வேண்டும் என்று ரயில்வே துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அப்போதைய, உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அதற்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து ஆட்சியமைத்த இடதுசாரி முன்னணி அரசு 50 சதவீத செலவை வழங்க முடியாது என்று முடிவெடுத்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ரயில்வே தனது சொந்தச் செலவில் இதை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. பின்னர், 2016 ஆம் ஆண்டில் பிரதமரின் சுற்றுச்சூழல் நிலையில் இத்திட்டம் சேர்க்கப்பட்டது.
அந்த சமயத்தில் இத்திட்டத்தின் மதிப்பீடு 2,050 கோடியில் இருந்து 2,815 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2019 இல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்தது. மாநில அரசு போதிய ஆர்வம் காட்டாததால் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்த இத்திட்டம் கடைசியாக 2021 ஜனவரியில் 50 சதவீத செலவு தொகை வழங்கலாம் என்று மாநில அரசு முடிவு எடுத்தது.
இதைத்தொடர்ந்து, கேரளா கட்டமைப்பு முதலீட்டு கழகத்தில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 2023 பட்ஜெட்டில் மத்திய அரசு இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியது. வந்தே பாரத் ரயில் ஓடும் வகையில் மதிப்பீடு திருத்தம் செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் புதிய மதிப்பீடு 3,810 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications