சபரிமலை கலரே இனி மாற போகுது..சன்னிதானம் வரை ரோப் வே திட்டம்! ஓகே சொன்ன வனத்துறை.. சூப்பர் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல ரோப் வே திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்காக நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டம் முடிக்கப்பட்டு தேவஸ்தானத்தின் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் மகர விளக்கு, மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோவிலில் குவிந்து ஐயப்பனை தரிசித்துச் செல்கின்றனர்.

தற்போது பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வகையில் மலைப் பாதையில் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல சத்திரம், புல் மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் வயதானவர்கள், குழந்தைகள், டோலி மூலம் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். மேலும் சபரிமலை கட்டுமானம், உணவு பொருட்கள், பிரசாதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுதையில் சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த பொருட்கள் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிராக்டர்களின் செல்லும்போது உயிர் அபாயம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் நேர விரயத்தை கருத்தில் கொண்டு சபரிமலையில் ரோப் வே திட்டத்தை செயல்படுத்த 17 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் வனத்துறையினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப் படாமல் இருந்தது. இந்த நிலையில் பம்பை ஹில்டாப் பகுதியிலிருந்து சபரிமலை சன்னிதானம் வரை சுமார் 2.7 கிலோமீட்டர் நிலத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோப் வே திட்டம் அமைய உள்ளது.
இதற்காக இரண்டு ஆண்டுகள் கால அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 40 முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை கொண்டு செல்ல முடியும். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களையும் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சபரிமலை சன்னிதானத்திலிருந்து பம்பைக்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும் பத்து நிமிடங்களில் இந்த திட்டத்தின் மூலம் பொருட்களையும், அவசர காலங்களில் கார் ஆம்புலன்ஸ்களையும் கொண்டு செல்லலாம். தற்போது மாளிகை புரத்தின் பின்புறம் அன்னதான மண்டபம் அருகே பயன்பாடின்றி இருக்கும் கட்டிடங்களை உடைத்து அங்கு ரோப் வே நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
நாற்பது முதல் 60 மீட்டர் உயரம் வரை ரோ ப்வே தூண்கள் அமைத்து அதில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் திட்டம் தாமதமாக வனத்துறையின் எதிர்ப்பும் ஒரு காரணமாக இருந்தது. இதனால் தற்போது இந்த திட்டத்திற்கு வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக கொல்லம் அருகே கட்டில பாறையில் வருவாய்க் துறை சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று திருவனந்தபுரத்தில் கையெழுத்தான நிலையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications