வரும் ஜூலை 17இல் சபரிமலை நடைதிறப்பு.. பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்
திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகளுக்காகத் திறக்கப்படும் என்றும் இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பூஜைகளுக்காகக் கோயில்கள் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலேயே இருந்தது.

அதேபோல கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலிலும் கடந்த சில மாதங்களாகவே பக்தர்கள் அனுமதிக்கப்படாமலேயே இருந்தனர்.
இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக வரும் ஜூலை 17 முதல் 21ஆம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 5 நாட்களும் பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் விகிதம் மொத்தம் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT- PCR சோதனையில் கொரோனா நெகடிவ் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழைக் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து அங்குள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அம்மாநில அரசு சமீபத்தில் தான் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications