தொடங்கிய சீசன்.. அதிகாலை சபரிமலை நடை திறப்பு! மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்! இன்று முதல் சிறப்பு பஸ்கள்
திருவனந்தபுரம்: இன்று அதிகாலை உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மண்டல கால பூஜையுடன் தொடங்கியது.
கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று பக்தர்கள் மாலை அணிந்து விரத்தத்தை தொடங்கி உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கு வந்து மாலை அணிந்து உள்ளார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை மண்டல காலம் இன்று தொடங்கி 41 நாட்கள் இருக்கும். இந்த மண்டல காலம் இன்று தொடங்கியுள்ள நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்றினார். 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு 'மேஜர்’ அறிவிப்பு.. நாளை முதல் 4 இடங்களில் சிறப்பு பேருந்துகள்!
கோயில் நடை
நேற்று மாலை 6 மணியளவில் தந்திரிக்கு முறைப்படி அபிஷேகம் நடத்தப்பட்டு கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. இறுதியாக நேற்று இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு இந்த ஆண்டின் மண்டல காலம் தொடங்கியது.
மண்டல பூஜை
இதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக இந்த ஆண்டு ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
கொரோனாவுக்கு பின்
கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால சீசன் கடந்த சில ஆண்டுகளாக பொலிவிழந்து காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா, கனமழை போன்ற சிக்கல்கள் இல்லாததால் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு
கோயில் அருகே பக்தர்கள் முன்பதிவு செய்யவும் சபரிமலை பாதையில் 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படம் இணைக்கப்பட்ட அரசு அடையாள அட்டையை பக்தர்கள் முன்பதிவு செய்ய வைத்திருந்தால் முன்பதிவு செய்யலாம்.
சிறப்பு ரயில்
இதற்காக கேரள அரசு, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றன. சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜைக்காக தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வழியாக 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன.
சிறப்பு பேருந்து
அதேபோல் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், கடலூர், தேனியிலிருந்து 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு இன்று முதல் சிறப்பு பேருந்துகளையும் இயக்க உள்ளது. கேரள மாநிலம் பம்பைக்கு இதற்காக குளிர்சாதன மற்றும் அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. 9445014452, 9445017793, 9445014424, 9445014463, 9445014416 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.