சசி தரூரை வீழ்த்த பக்கா பிளான் போடும் பாஜக.. திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கும் நடிகை ஷோபனா?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் நடிகை ஷோபனாவா வேட்பாளராக களமிறக்க பாஜக பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சசி தரூரை வீழ்த்த நடிகை ஷோபனா சரியான சாய்ஸாக இருக்கும் எனக் கட்சி மேலிடம் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையை வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் பாஜக பரிசீலிப்பதாக சொல்லப்படுகிறது.
வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியிருப்பதால், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. மத்தியில் கடந்த 2014, 2019 ஆம் ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பாஜக வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வியூகம் வகுத்து வருகிறது.

இதேபோல் மறுபுறம் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கொளோடு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை துவங்கின. ஆனால், இந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தனியே போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். நிதிஷ் குமார் பாஜகவில் இணைந்தது இந்தியா கூட்டணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலங்களில் கவனம் செலுத்தும் பாஜக: எனினும் வட மாநிலங்களில் சற்று வலுவாக இருக்கும் பாஜகவால் தென் மாநிலங்களில் காலூன்ற முடியவில்லை. இதன் காரணமாக தென் மாநிலங்களில் எப்படியாவது கடந்த முறையை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் பாஜக தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.
இதற்காக தென் மாநிலங்களில் தொகுதி வாரியாக யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்த தீவிரமாக பாஜக பரிசீலித்து வருகிறதாம். இதில் குறிப்பாக கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் சசிதரூரை வீழ்த்த பாஜக யூகம் வகுத்து வருகிறதாம். அவரை வீழ்த்த யாரை அங்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று தீவிரமாக பரிசீலித்து வருகிறது
நடிகை ஷோபனா போட்டியா?: திருவனந்தபுரத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை பாஜக களம் இறக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொறுத்தவரை வெற்றிகரமான விண்வெளி திட்டங்களால் இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவராக உள்ளார். இதனால் திருவனந்தபுரத்தை சேர்ந்த சோம்நாத்தை சொந்த தொகுதியில் நிறுத்தி சசி தரூரை வீழ்த்த பாஜக முயற்சித்து வருவதாகவும் இது தொடர்பாக அவரிடம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரம் தொகுதியில் நடிகை ஷோபனாவை நிறுத்த பாஜக யோசித்து வருகிறதாம். மக்களுக்கு தெரிந்த பரிட்சையமான முகத்தை நிறுத்துவதால் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என பாஜக நம்புகிறது. மேலும் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை மக்களுக்கு தெரிந்த முகத்தை நிறுத்துவதால் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என பாஜக நம்புகிறது.
பெரிய லிஸ்டை வைத்திருக்கும் பாஜக: இது போக இன்னும் நிறைய பட்டியலை பாஜக திருவனந்தபுரம் உள்ளிட்ட தொகுதியில் களமிறக்க முடிவு எடுத்துள்ளதாம். நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், கேரளாவில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளருமான சுரேஷ் குமாரை களமிறக்கவும் பாஜக பேசி வருகிறதாம். சுரேஷ் குமார் கேரள திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி தான் சுரேஷ் குமார் பாஜகவில் இணைந்துள்ளார்.
இது போக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் கொண்ட பெரிய லிஸ்ட்டை பாஜக ரெடியாக வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சசி தரூர் தான் எம்.பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications