கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, லட்சத்தீவு மற்றும் அந்தமானில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். வழக்கமாக கேரள மாநிலத்தில் ஜூன் 1ம் தேதியோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தென்மேற்கு பருவமழை துவங்கி விடும். இந்த காலக்கட்டத்திற்குள் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நிலவியது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது
பின்னர் ஜூன் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6ம் தேதியும் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. பின்னர் இது குறித்து தகவல்தெரிவித்த வானிலை மையம், மேலும் 2 நாட்கள் தாமதமாக 8-ம் தேதி தான் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என அறிவித்திருந்தது. அதன் படி இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரத்தை தருவது இந்த தென்மேற்கு பருவமழை தான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.
இந்நிலையில் நடப்பாண்டு வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை தவறாமல் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் துவங்கி செப்டம்பர் வரை சராசரியாக இந்த 4 மாதங்களில், 203 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 251 செ.மீ மழையை கொட்டித் தீர்த்தது.
இதனால் கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இதனிடையே தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications