"அலறும் கேரளா.." 5 பேருக்கு நிபா பாதிப்பு.. தமிழக எல்லையில் ஹை அலர்ட்.! தீவிர கட்டுப்பாடுகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கே மீண்டும் இப்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் கேரளாவில் அதிகம் என்பதால் அங்கே திடீர் பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பும் கூட முதலில் கேரளாவில் தான் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது அங்கே மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே மாநிலம் அலர்ட் மோடில் இருக்கிறது.
நிபா பாதிப்பு: கோழிக்கோடு மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி மற்றொருவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் உயிரிழந்தனர். அவர்களுக்குக் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பு இருந்துள்ளது. அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருந்த நிலையில், அதற்கான சோதனை செய்யப்பட்டது.
இந்த முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தான் தெரிந்தது. இதில் இருவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது. உயிரிழந்த இருவரின் வீடுகள் 20 கிமீ தூரத்திற்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறை இறங்கியுள்ளது. சுகாதார ஊழியர் ஒருவருக்கும் நிபா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், அங்கே வைரஸ் பாதிப்பு 5ஆக உயர்ந்துள்ளது.
கட்டுப்பாடுகள்: இதனால் அங்கே பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் இருக்கும் பல பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல நிபா வைரசால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 789 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை இரண்டு முறை நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கடந்த மே 2018இல் ஏற்பட்ட பாதிப்பில் 17 பேரும், தொடர்ந்து 2021இல் ஏற்பட்ட பாதிப்பில் ஒருவரும் உயிரிழந்தனர்.
பரிசோதனை: இப்போது மூன்றாவது முறையாக அங்கே நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் இருக்கும் பல பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோரின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நிபா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாடு கேரளா பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications