கேரளாவை அலற விட்ட அரளிப் பூ.. செல்போன் பேசியபடி பூவை தின்ற செவிலியர்! அரளி பூவால் மரணம் வருமா?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதை செல்போனில் உறவினருக்கு தெரிவித்து கொண்டிருந்தபோது, அரளி பூவை தெரியாமல் சாப்பிட்ட செவிலியர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் அரளி பூ தான் செவிலியர் சூர்யாவின் மரணத்திற்கு காரணமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் வயல்வெளி ஓரங்களிலும் நீர்நிலை ஓரங்களிலும் மஞ்சள் நிற அரளி பூக்கள் பூத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் அவை விஷத்தன்மை கொண்டவை.. கிராமப்புறங்களில் இன்றும் கூட அரளி விதைகளை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்ற பேச்சுக்களை பார்க்க முடியும்.

இதன் காரணமாக அந்த பூக்களை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. அதே நேரத்தில் பூஜைக்காகவும் அழகுக்காகவும் பல்வேறு வகை வண்ண அரளி பூக்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டு பயிர் செய்யப்படுகிறது.
அரளி பூ: நெடுஞ்சாலை ஓரங்களில் கூட ரோஸ் நிற அரளி பூக்களை அதிக அளவில் பார்க்க முடியும். இவை ஆபத்தானவை என்பதால் அதன் அருகில் செல்லக்கூடாது என பெரியவர்கள் எச்சரித்துள்ளதையும் நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் வீட்டிலிருந்த அரளி பூவை சாப்பிட்ட செவிலியர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த சூர்யா அப்பகுதி மருத்துவமனை ஒன்றில் செவிலியர் பணியாற்றி வந்தார்.
செவிலியர்: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2ஐ ஏ பிளஸ் உடன் தேர்ச்சி பெற்ற அவர், பிஎஸ்சி நர்சிங்கில் நல்ல மதிப்பெண் பெற்றார். இவரது தந்தை சுரேந்திரன் கட்டிட தொழிலாளி. இதய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பள்ளிப்பட்டு அருகே பொய்யக்கரையில் தாயார் அனிதா தற்காலிக டீக்கடை நடத்தி வருகிறார். குடும்பத்தின் ஒரே வருமானமே அதுதான். வறுமை காரணமாக வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்க வேண்டும் என சூர்யா நினைத்து வந்த நிலையில் அவருக்கு இங்கிலாந்தில் வேலை கிடைத்தது.
உடல் நல குறைவு: இதை அடுத்து தனது குடும்ப கஷ்டம் தீர்ந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து பேசி வந்தார். இங்கிலாந்து செல்லும் ஒரு நாளைக்கு முன்பாக பக்கத்து வீட்டு தோழிகளிடம் பேசிவிட்டு செல்போன் பேசிக்கொண்டே வீடு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக அரளி பூவை எடுத்து சாப்பிட்டுள்ளார். தான் சாப்பிட்டது அரளி பூ என்று தெரியாமலேயே ஆட்டோவில் ஏறி விமான நிலையம் சென்ற நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பரிதாப பலி: இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இங்கிலாந்துக்கு பயணம் என்பது அவரது குடும்பம் மற்றும் சூர்யாவின் கனவாக இருந்தது.. ஆனால் சில மணிநேரங்களில் எல்லாம் தலைகீழாக மாறியது. அரளி பூவை சாப்பிட்ட செவிலியர் மரணம் அடைந்தது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவ மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் செவிலியரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன?: பிரேத பரிசோதனை அறிக்கையில், அரளி பூ மற்றும் இலையை சாப்பிட்டது தான் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. சூர்யா இலையையும் பூவையும் கடித்த நிலையில், தவறை உணர்ந்து அதை துப்பினார். ஆனால் இலைச்சாறு சில துளிகள் உள்ளே சென்றது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக கூறியுள்ளனர், ஆனால் வயிற்றில் உள்ள உணவுத் துகள்களில் பூ அல்லது இலையின் பாகங்கள் காணப்படவில்லை. எனவே விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே சரியான விஷத்தன்மையை கண்டறிய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நச்சு அதிகம்: அதே நேரத்தில், அரளி பூவின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வுகளை நடத்திய டாக்டர் பெனில் கோட்டக்கல், பூவில் உள்ள ஆல்கலாய்டுகள் கார்டியாக் கிளைகோசைடுகளின் வகையைச் சார்ந்தது. இந்த பூவில் உள்ள ஆல்கலாய்டுகள் இதயத்தில் நேரடியாகச் செயல்படுகின்றன. தண்டின் உள்ளே காணப்படும் லேடெக்ஸில் ஆல்கலாய்டுகளின் இருப்பு மிக அதிகமாக உள்ளது,'' என்றார். அதிக பூக்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய ரக அரளி செடிகளில் இந்த நச்சுகள் அதிகம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. "இருப்பினும், அது இன்னும் அறிவியல் பூர்வமாக அளவிடப்படவில்லை," என கூறினார்.
மாறுபடும்: சங்கனாச்சேரி எஸ்.பி.கல்லூரி தாவரவியல் துறையின் துணை முதல்வர் மற்றும் இணைப் பேராசிரியரான ஜோசப் ஜாப் கருத்துப்படி, அரளி செடியின் நச்சுத்தன்மை, உட்கொள்ளும் பகுதி, வயது மற்றும் அதை உட்கொள்ளும் நபரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனவும், அபோசைனேசி குடும்பத்தில் உள்ள அனைத்து தாவரங்களும் இந்த இதய தூண்டுதல் ஆல்கலாய்டுகளைக் கொண்டுள்ளன” என்றார்.












Click it and Unblock the Notifications