கண் மூடியவர்களை மண் மூடிய கொடூரம்..உயிர்களை காவு கேட்ட வயநாடு நிலசரிவு ! 271ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது கொட்டும் மழையிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்துள்ள நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்தே வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் நூற்றுக்கணக்காணோர் மீட்கப்பட்டாலும், மேலம் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகத்தில் இருந்து சென்ற மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலரும் இடுபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே உயிரிழந்த மக்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது.
அடையாளம் கண்ட உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர் அதிகாரிகள். இதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து கேரளா நிலச்சரிவு சம்பவத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவதோடு நிதி உதவியும் அளித்து வருகின்றனர். தமிழ்நாடு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதியினை அளித்திருக்கிறார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை சேகரித்து கேரளாவில் வயநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலக்கல் சிக்கி பலியானவர்கள் உடல்கள் மலப்புரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு 40 உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் அவை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 243 ஆக உயர்ந்திருக்கிறது. இதனை கேரளா அரசு உறுதி செய்திருக்கும் நிலையில் அவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து மீட்ப பணி நடைபெற்று வரும் நிலையில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications