முதல் உடலை மீட்டது நான்தான்! 300 பேரை காப்பாற்றியவர்! 27 பேரை பறிகொடுத்தவர்! இவர் தப்பியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வயநாடு: முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 300 பேரை மீட்ட ஜீப் டிரைவர் ஒருவர் தான் கண் முன்னால் கண்டக் காட்சிகளை வேதனையோடு விவரித்திருக்கிறார். அதைக் கேட்கும்போது மனம் பதறுகிறது.

வயநாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய பல மலைக் கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 400க்கும் அதிகமான உயிர்கள் இந்த நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நிலை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

Wayanad Kerala

இந்நிலையில் சூரல்மலை பகுதியில் வசித்து வந்த ஜீப் டிரைவர் ஒருவர் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 300 பேர்களை மீட்டதாக ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அத்துடன் முண்டக்கையில் ஆற்றில் சிக்கிய சிறுவனின் உடலை 3 மணி நேரம் போராடி மீட்டதாகச் சொல்லும் இவர், அதுதான் முண்டக்கையில் மீட்கப்பட்ட முதல் சடலம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலச்சரிவு இரவு எப்படித் தொடங்கியது. அவர் எப்படி இதிலிருந்து உயிருடன் தப்பினார் எனப் பல கண்ணீர் கதைகளைக் கூறியுள்ளார்.

மீட்புப் பணியிலிருந்த ஜீப் டிரைவர் பேசுகையில், "சரியா இரவு 1 மணி இருக்கும். வீட்டில் கரண்ட் இல்லை. ஆகவே எனது ஜீப்பை ரோட்டில் நிறுத்திவிட்டு வண்டியில் சார்ஜ் போட்டேன். மணி 1.49 இருக்கும்.பயங்கர சத்தம். என்னவென்று புரியவில்லை. மக்கள் எல்லோரும் வீட்டிலிருந்து டார்ச் விளக்குடன் ரோட்டுக்கு வந்துவிட்டார்கள். உடனே வண்டியை முண்டக்கை ஓட்டச் சொன்னார்கள். எனக்கு முண்டக்க்கை போகும் வரை என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. சூரல்மலை பாலம் அருகே ஒரு பையன் உடம்பில் துணியே இல்லாமல் கதறிக் கொண்டு ஓடிவந்தான். நான் உடனே அவனுக்கு எனது கோட் கொடுத்து மாட்டிக் கொள்ளச் சொன்னேன். அவன் தனது தாய் ஆற்றில் மாட்டிக் கொண்டதாகச் சொன்னான். இவர்களைக் காப்பாற்றி மேட்டுப் பகுதிக்குக் கொண்டு போனேன். அதன் பின்னர் விடியற் காலைவரை மீட்புப் பணி தொடர்ந்தது" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"முண்டக்கை எப்படியோ அதேபோலத்தான் சூரல்மலை. எந்த வித்தியாசமும் இருக்காது. மேப்பாடிக்கு அடுத்து சூரல்மலைதான். இங்கேதான் அனைத்து வசதிகளும் இருந்தன. ஆஸ்பத்திரி, மளிகை சாமான் கடைகள், 2 ரேஷன் கடைகள் எல்லாம் இங்கேதான் இருந்தன. இந்த சூரல்மலையை ஒரு இயற்கை சொர்க்கம் எனச் சொல்லலாம். ஆறு, மலை என அவ்வளவு அழக்காக இருக்கும். அதற்காகத்தான் சுற்றுலாவாசிகள் வருவார்கள். இங்கே இருந்து பார்த்தால் முண்டக்கை முழு வியூவ் பார்க்கலாம். அதேமாதிரி முண்டக்கையில் உள்ள ஒரு கோயிலின் உச்சியிலிருந்து பார்த்தால், சூரல்மலையை பார்க்கலாம்.

எங்கள் குடும்பத்தில் மொத்தம் 27 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் முண்டக்கையிலிருந்துள்ளனர். மீதமுள்ள 22 பேர் சூரல்மலை ஹை ஸ்கூல் ரோட்டில் இறந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 300 பேர்களை நான் இந்த ஜீப் மூலம் மீட்டுள்ளேன். முதலில் அவர்களை ஆஸ்பத்திரியில் தங்க வைப்பதற்காக அழைத்துப் போனேன். அங்கே பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அதனால் வன அதிகாரிகளின் அலுவலகத்திற்குக் கொண்டு போய் தங்க வைத்தோம். முண்டக்கையில் முதல் உயிரை மீட்டது நான்தான். இரவு ஆற்றில் மாட்டிக் கொண்ட சிறுவனைக் காலை 9 மணிக்கு மீட்டோம். கயிறு போட்டு அவனை மீட்க 3 மணி நேரம் ஆனது. அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எடுத்து வைத்துள்ளேன்.

எவ்வளவு உடல்களை எடுத்திருப்பேன் என்று கணக்கே சொல்ல முடியாது. அவ்வளவு உடல்களை மீட்டு எடுத்திருக்கிறேன். 100க்கு மேலான உடல்களை எடுத்திருப்பேன். கை, கால்களை இழந்து உயிருடன் இருந்த நிறையப் பேரை மீட்டுள்ளேன். அவர்களை மருத்துவமனைக்கு உடனே கொண்டு போக முடியவில்லை. ஏனெனில் பாலம் உடைந்துவிட்டது. பாலம் தாண்டிப் போனால்தான் மருத்துவமனை. ஆகவே, அருகிலிருந்த வன அதிகாரிகளின் குவாட்டர்ஸில் தங்கவைத்து சிகிச்சை அளித்தோம்.

ஆரம்பத்தில் என்னால் உடல்களை எடுக்கவே முடியவில்லை. அந்த வலி தாங்காமல் நான் போய்விட்டேன். அதன்பின்னர் நானும் செய்யவில்லை என்றால் யார் செய்வார்கள்? இங்கே யாருமே இல்லை. இருக்கும் நாம் தான் செய்ய வேண்டிய கட்டாயம். அதை உணர்ந்து வந்து மீண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டேன். இந்த நிலச்சரிவு வினாடிக்கு 57 மீட்டர் வேகத்தில் வந்ததாகச் சொல்கிறார்கள். அதாவது 516மீட்டர் வேகம். மூன்று முறை இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. முதலில் லேசானது. ஆகவே மக்கள் உணரவில்லை. அடுத்து இரண்டு முறை வந்த சரிவுகள் மிகப்பெரியவை. முதல் சரிவில் சூரல்மலை பாலம் போகவில்லை. முண்டக்கையில் மழை பெய்தால் சூரல் மலைக்குத்தான் வரும்.

என்னுடன் மூன்று எஸ்டேட் அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களை அழைத்துப் போன இடங்களில் எல்லாம் இருந்து உடல்களை மீட்டோம். அதில் ஒரு அதிகாரியும் அவரது மனைவியும் இறந்துவிட்டனர். மனைவி உடலை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது. கணவரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் நிற்காமல் செல்போன் அடித்துக் கொண்டே இருந்து. அவ்வளவு அழைப்புகள். சூரல்மலையில் ஒரு கோயில், மண்டபம் இருந்தது. அவை இரண்டுமே இப்போது இல்லை. அதன் அருகே ஒரு மிகப்பெரிய பாலம் இருந்தது. அது இருந்ததற்கான அடையாளமே இல்லை.

இதேபோல 2020 இல் ஒரு நிலச்சரிவு வந்தது. அப்போதும் இதே ஆற்றில்தான் வெள்ளம் போனது. மிகப்பெரிய பாதிப்பு ஒன்றுமே இல்லை. முண்டக்கை பாலத்தில் அடித்துக் கொண்டு போன மரங்களால் நீர் போக முடியாமல் தடுப்பு ஏற்பட்டது. அதனால் 3 பேர் இறந்து போனார்கள். ஆகவே, இந்தளவுக்கு இப்போது நிலச்சரிவு வரும் என யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. 2020 இல் நிலச்சரிவு எங்கே உருவானதோ அதே இடத்தில்தான் இந்த முறையும் நடந்துள்ளது. மாற்றமே இல்லை.

இந்த நிலச்சரிவில் முண்டைக்கை என்ற ஊரே இல்லாமல் போய் விட்டது. 400 வீடுகள் இருந்தன. அதில் இப்போது 30 வீடுகள்தான் மிஞ்சி உள்ளன. போஸ்ட் ஆபீஸ், கேண்டீன், வீடுகள், பாலம் என எதுவுமே இல்லை. அங்கே போனாலே அழுகை தானாக வருகிறது. அந்தளவுக்கு சோகம் தாண்டவமாடுகிறது.

இந்த முண்டக்கை, சூரல்மலை எல்லாம் எஸ்டேட் தனியாருக்குச் சொந்தம். ஆகவே நிலங்கள் கிடையாது. மக்கள் மீதம் உள்ள ஆற்றின் ஓரம், மலைச்சரிவில்தான் வீடு கட்டி வாழ முடியும். அடித்துக் கொண்டுபோன பல வீடுகள் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்தவை. கோயில்கூட ஆற்றுக் கரையோர பகுதியில்தான் இருந்தது. இங்கே வேறு சமவெளி பகுதி கிடையாது. தனியார் இடங்கள் எல்லாம் ஆற்றின் சமவெளியில்தான் கிடைக்கும். எஸ்டேட் இடத்தை யாரும் வாங்க முடியாது.

இங்கே வாழ்ந்து வந்தவர்கள் எல்லாம் தினக்கூலிகள். தினம் 450ரூபாய்தான் வருமானம். இதைவிட்டுப் போனால் வேறு தொழில் தெரியாது. மழைக்காலம் என்றால் வெளியில் போய் தங்குவார்கள். மழை முடிந்ததும் ஊர் திரும்புவார்கள். அதிக மழை என்றால் அரசு மாற்று ஏற்பாடு செய்யும். இந்த முறை ஏற்பாடு செய்வதற்கு முன்பே நிலச்சரிவு வந்துவிட்டது.

முண்டக்கையில் நிலச்சரிவுக்கு முன்பாக 150பேர் ரிசார்ட் போய் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆகவே அவர்கள் தப்பினார்கள். சூரல்மலையில் மழை வந்தால் அரை மணிநேரத்தில் வெள்ளம் வாய்க்கால் வழியாகப் போய் வடிந்துவிடும். ஆகவே, நம்பிக்கையாக மக்கள் இருந்துள்ளனர். அந்தக் கணக்கு தப்பிவிட்டது. எனவே இவ்வளவு உயிர்ச்சேதம். சூரல்மலையில் இரவில்தான் நிலச்சரிவு வந்தது. எல்லோரும் தூங்கும் நேரம். முண்டக்கையில் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டுள்ள நிலையில் ஒரு சடலத்தை எடுத்தேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+