பாலியல் புகார் அளித்த நடிகைகளுக்கு மிரட்டல்.. செக் வைத்த கேரள உயர் நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே நடுக்கம் கண்டுள்ளது. இந்நிலையில், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்த நடிகைகளுக்கு மிரட்டல் விடுப்பதை தடுக்கும் விதமாக சிறப்பு அதிகாரியை நியமிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா சினிமா என்றாலே அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் சில ஒன் லைன் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த படத்தையும் எடுத்து ஹிட் ஆக்குவதே மலையாள சினிமாவின் சிறப்பு. தமிழகத்தில் மலையாள படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. சமீபகாலமாக பல மலையாள படங்கள் இந்திய அளவில் பெரிய ஹிட்களைக் கொடுத்தன.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒட்டுமொத்த கேரள திரையுலகமே தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநில அரசால் கடந்த 2017 ஆம் தேதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண் நடிகர்கள், கலைஞர்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மலையாள திரையுலகின் பல பெண் கலைஞர்கள், நடிகைகளிடமிருந்து ஹேமா கமிட்டியில் பாலியல் தொல்லை தொடர்பான பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பான வாக்குமூலங்களும் ஹேமா கமிட்டி மூலமாக சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகாரில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் கேரள திரையுலகே அதிர்ந்து போனது.
இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் மோகன்லால், சித்திக், எடவேலா பாபு, பாபுராஜ், ஜெயசூர்யா, முகேஷ், நிவின் பாலி உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட உரிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் நிவின் பாலி மீதான புகார் ரத்து செய்யப்பட்டது. ஹேமா கமிட்டி 3,896 பக்கங்களில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் வெறும் 296 பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வாக்குமூலம் அளித்த 20 பேரிடம், இதுவரை சாட்சிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாலியல் புகார் கொடுத்த நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக டபுள்யூ.சி.சி. சினிமா பெண்கள் கூட்டியக்கம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், புகாருக்குள்ளான நபர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, புகார் அளித்த நடிகைகளைப் பாதுகாக்கும் வகையில், சிறப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அதிகாரியை எளிதாக தொடர்பு கொள்வதற்காக அவரது பெயர், விவரங்களை பொதுவெளியில் சிறப்பு விசாரணை குழு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு அதிகாரி மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் டிசம்பர் 11 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications