ராகுலுக்கு எதிராக போட்டியிடும்.. பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்! பரபர கேரள தேர்தல் களம்
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும், 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது. எனவே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

கேரளாவை பொறுத்த அளவில் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் vs மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி vs பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக வேட்பாளராக சுரேந்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் கேரள மாநில பாஜக தலைவராவார்.
இந்நிலையில் இவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன. அதாவது, இவர் மீது மொத்தம் 242 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 2018ம் ஆண்டு நடந்த சபரிமலை போராட்டங்களின் காரணமாகத்தான் பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் அனைத்து வயதை சேர்ந்த பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்த முயன்றபோது, இந்துக்களின் மாண்பையும், கலாச்சாரத்தையும் மாநில அரசு கெடுக்கிறது என்று கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, கேரள காவல்துறை பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. கைது, வழக்குப்பதிவு என எது நடந்தாலும், பாஜக இந்த போராட்டத்திலிருந்து பின் வாங்காமல் இருந்தது.
இதுதான் இவ்வளவு வழக்குப்பதிவுகளுக்கு காரணமாக இருக்கிறது என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஜார்ஜ் குரியன் கூறியிருந்தார். சுரேந்திரன் மட்டுமல்லாது எர்ணாகுளம் தொகுதி பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீதும் சுமார் 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், ஆலப்புழா பாஜக வேட்பாளர் ஷோபா சுரேந்திரன் மற்றும் வடகரை பாஜக வேட்பாளர் பிரபுல் கிருஷ்ணா மீதும் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், "பாரத்தின் சில பகுதிகளில் தேசியவாதியாக இருப்பது கடினம். அன்றாடம் போராட்டத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார். சுரேந்திரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 242 வழக்குகளில் 237 வழக்குகள் சபரிமலை போராட்டங்கள் தொடர்பானவை. 5 வழக்குகள் மற்ற போராட்டங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications