வயநாட்டில் பிரியங்கா காந்தி.. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க காரணம் இதுதானா? வெளியான தகவல்
திருவனந்தபுரம்: 300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர். குறிப்பாக பிரியங்கா காந்தி வயநாடு வந்ததற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டன. ஏறத்தாழ கடந்த ஒரு வாரமாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை 300ஐ கடந்திருக்கிறது. மக்கள் பெரும் துயரத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடு சென்று, முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர். வயநாடு ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற லோக்சபா தொகுதி. எனவே, இங்கு அவர் சென்றதில் வியப்பேதும் இல்லை. ஆனால், பிரியங்கா காந்தியும் உடன் சென்றதுதான் பேசுபொருளானது.
கேரள மாநிலத்தில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் (சிபிஎம்) மாறி மாறி ஆட்சியை அமைக்கும். இந்த முறை சிபிஎம்தான் ஆட்சியில் இருக்கிறது. இருப்பினும் வயநாட்டில் எப்போதும் காங்கிரஸ் கொடிதான் உச்சியில் பறக்கும். கடந்த 2009ம் ஆண்டு வயநாடு லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை காங்கிரஸ்தான் இந்த தொகுதியின் வெற்றியாளர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி, வயநாடு தொகுதி என இரண்டில் போட்டியிட்டார். ஆனால் அமேதியில் வெற்றி பெறவில்லை. வயநாட்டில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வயநாடு தேர்தல் பிரசாரத்தில் ராகுலுக்காக பிரியங்காக காந்தி களமிறங்கியிருந்தார்.
அதேபோல 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் வயநாடு மற்றும் உ.பியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அப்போதும் வயநாடு பிரசாரத்தில் பிரியங்கா காந்தியின் குரல் தனது சகோதரனுக்காக பலமாக ஒலித்திருந்தது. இப்படியாக வயநாட்டிற்கும் பிரியங்காவுக்கும் அவ்வப்போது தொடர்புகள் இருந்து வந்திருக்கின்றன.
இதனை மேலும் நெருக்கமாக்கும் விதமாக காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பு அமைந்திருந்தது. அதாவது தேர்தல் விதிகளின்படி இரண்டு தொகுதியில் போட்டியிட்டாலும், ஏதேனும் ஒரு தொகுதியில்தான் எம்பியாக நீடிக்க முடியும். எனவே ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் யார் போட்டியிடுவார் என கேள்வி எழுந்த போது, பிரியங்காவை கை காட்டியது காங்கிரஸ் தலைமை.
அதாவது நாட்டின் வட மாநிலங்களை (ரேபரேலி) ராகுலும், தென் மாநிலங்களை (வயநாடு) பிரியங்காவும் பிரநிதித்துவப்படுத்த இருக்கின்றனர். இது காங்கிரஸின் அரசியல் யுக்தி. நாட்டின் இரண்டு முனைகளிலிருந்தும் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் சந்திக்க வந்தபோது பிரியங்கா காந்தியும் வந்திருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications