எனது தந்தை இறந்த போது ஏற்பட்ட வலியை போல மீண்டும் உணர்கிறேன்! வயநாட்டில் உடைந்து பேசிய ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள வயநாட்டிற்கு நேரில் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, தனது தந்தை இறந்த போது எந்த ஏற்பட்ட வேதனையை போல இன்று உணர்வதாக உருக்கமாக பேசினார்.
கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் தென் மேற்குபருவமழை கடந்த சில வாரங்களாகவே வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் பெய்த கனமழையை தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் அந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளமும் பெருக்கெடுத்தது.

இதனால் அங்கிருந்த சாலைகள், பாலங்கள், வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. அதிகாலை நடந்த சம்பவம் மொத்த தேசத்தையும் உலுக்கியது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். ராணுவமும் வரவைக்கப்பட்டது.
மீட்பு படையினர் உடனடியாகநிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக மீட்புப்பணியை தொடங்கினர். 3-வது நாளாக இந்த மீட்பு பணி நீடித்து வருகிறது. தற்போது வரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்தவாறு இருக்கின்றன.
இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வயநாட்டிற்கு சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தங்கவைக்கப்பட்டு இருக்கும் மக்களை சந்தித்து பேசினார்கள்.
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வயநாட்டு மட்டும் இன்றி கேரளா, நாட்டிற்கு இது மிகப்பெரும் சோக நிகழ்வு. இங்குள்ள நிலமையை அறிந்து கொள்வதற்காக இங்கு வந்தோம். எத்தனை மக்கள் வீடுகளையும் உயிர்களையும் பறிகொடுத்து உள்ளார்கள் என்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் முயற்சிப்போம். பலர் வேறு இடங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். இங்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மருத்துவர்கள், நர்சுகள், தன்னார்வர்லர்கள், நிர்வாகத்தினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது தந்தையை (ராஜீவ் காந்தி) இழந்த போது உணர்ந்ததை போல இன்று நான் உணர்கிறேன். ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் வயநாடு நோக்கியே உள்ளது" என்று ராகுல் காந்தி உருக்கமாக பேசினார்.












Click it and Unblock the Notifications