இனி என்டே ஸ்டேட்டு கேரளமானு.. கேரளம் ஆனது கேரளா! தேர்தல் வரும்போது பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவின் பெயரை மாற்றம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பெயர் கேரளா என்பதில் இருந்து கேரளம் என்று மாற்றப்படும்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு உடனேயே கேரளாவிலும் தேர்தல் நடைபெறும். இதற்கிடையே கேரள மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் கொடுத்துள்ளது.

கேரள பெயர் மாற்றம்
கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றும் அம்மாநில அரசின் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. சட்டமன்றத் தேர்தல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பே மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. இது மாநில அடையாளம் சார்ந்தது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் உள்ள பிரதமரின் புதிய அலுவலகக் கட்டிடமான சேவா தீர்த்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமரின் புதிய அலுவலகக் கட்டிடத்தில் நடைபெறும் முதல் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக
மாநிலத்தின் பெயரை "கேரளா" என்பதில் இருந்து "கேரளம்" என அதிகாரப்பூர்வமாக மாற்றக்கோரி, 2024 ஜூன் 25ம் தேதி இரண்டாவது முறையாக மாநில சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசு முந்தைய தீர்மானத்தை ஆய்வு செய்து சில மாற்றங்களைச் செய்யுமாறு திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றக் கோரி, அம்மாநிலச் சட்டசபை முதலில் ஆகஸ்ட் 2023இல் ஒருமனதாக நிறைவேற்றியது. அதைப் பரிசீலனை செய்த மத்திய அரசு, சில மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்தே மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பினராயி விஜயன்
இந்தத் தீர்மானத்தைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான் சட்டசபையில் முன்மொழிந்து இருந்தார். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றும், இது மாநிலத்தின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் பிரனாயி விஜயன் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என குறிப்பிடப்பட்டிருந்தாலும், சுதந்திரப் போராட்டக் காலம் முதலே மலையாள மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து கேரளம் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவதையும் அவர் விளக்கினார்.
இனி கேரளம் தான்
எனவே, அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழும், எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' எனத் திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளச் சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அந்த மசோதாவுக்கு தான் மத்திய அரசுக்கு இப்போது ஒப்புதல் கொடுத்துள்ளது.
கேரளா தேர்தல்
கேரளாவை பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. குறைந்தது 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே அங்கு ஆட்சியைப் பிடிக்கும். இப்போது அங்கு பிரனாயி விஜய் அரசு ஆளும் கட்சியாக உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு அங்குப் பெரியளவில் பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications