விஏஓ ஆபீசரை தேடி வந்த வில்லங்கம்.. அரசு ஊழியருக்கு அரசு அலுவலகத்தில் ஒரே நாளில் போன மரியாதை
திருவனந்தபுரம்: லஞ்சம் வாங்குவது தவறு என்றாலும் இந்தியா முழுக்க பல்வேறு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருக்கிறார்கள். புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள்.. அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கேரள மாநிலம் திருச்சூர் அருகே விஏஓ ஒருவர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
வருவாய் துறை ஊழியர்களில் சிலர் எல்லா மாநிலங்களிலும் பட்டா, பத்திரப்பதிவு, நிலத்தை அளக்க என்று ரியல் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களுக்கு லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்கினால், பத்திரப்பதிவினை முடித்தால், நிலத்தை அளந்தால், வாரிசு சான்றிதழ் வாங்கினால் அவர்களை மக்கள் ஆச்சர்யமாக பார்க்கும் அளவிற்கு பல்வேறு பகுதிகளில் நிலைமை உள்ளது. இந்தியா முழுக்க அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன.

சொத்துக்களை கணக்கு காட்டவேண்டும். அரசு ஊழியர்களின் அலுவலகங்களில் அடிக்கடி ரெய்டு நடக்கும். அதேபோல் லஞ்சம் கேட்பதையும் வாங்குவதையும் படம்பிடிக்க செல்போன் கேமராக்களும் உள்ளன. இதேபோல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கினால் உடனே கைது செய்யப்படுவார்கள். சஸ்பெண்டும் செய்யப்படுவார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்தால் மட்டுமே விடுதைலையாக முடியும். இல்லாவிட்டால் தலைக்குமேல் தொங்கும் கத்தி போல் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடரும். ஒரு நாள் அதற்கு சிறையில் கம்பி எண்ண வேண்டியது வரும். கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு அரசு ஊழியர் சிக்கி கைதாகி உள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மேம்பாடம் அருகே ஆலைக்கல் குழம்பு பகுதியை சேர்ந்த ஐசக் (48) என்பவர், தனது நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக, மதிப்பீடு செய்து தர வேண்டும் என்று திருச்சூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிக்கு மனு அனுப்பி இருந்தார். அதன் பேரில் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, மதிப்பீட்டு அறிக்கை அளிக்குமாறு திருச்சூர் மாவட்டம் சேலக்கரா அருகே வெங்காநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியாக சசிதரன் (வயது 53) என்பவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் சசிதரன் ஆய்வு செய்த போது, நிலத்தின் மதிப்பீட்டு விலையை அதிகரிக்க வேண்டும் என்றால், ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஐசக்கிடம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஐசக், திருச்சூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜிம் போலிடம் சென்று புகார் அளித்தார்.
திருச்சூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியின் ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய பத்து 500 ரூபாய் நோட்டுகள் ஐசக்கிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் அலுவலகத்தில் இருந்த சசிதரனிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார் அதனை அவரும் வாங்கி கொண்டார். அப்போது மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமல்தாஸ், பைஜூ, ராஜன் ஆகியோர் சசிதரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சூர் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருச்சூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications