இந்திரா காந்தி 2.0: வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மமதா பிரசாரம்!
திருவனந்தபுரம்: வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து உ.பி. ரேபரேலி தொகுதி எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

இதனால் வயநாடு லோக்சபா தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர்,ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுடன் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறக் கூடும். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பிரசாரங்களை மட்டுமே மேற்கொண்டு வந்தார் பிரியங்கா. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தேர்தல் அரசியலில் களமிறங்காமல் இருந்தார் பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலிலும் பிரியங்கா காந்தி கால் பதித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியலை அவரது பாட்டியும் இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிற இந்திரா காந்தி அம்மையாருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பிரசாரம் செய்வார் என்கின்றன தகவல்கள். இந்திரா காந்தி அம்மையாரின் செல்லப்பிள்ளையாக அரசியலில் இறங்கியவர் மமதா பானர்ஜி. பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திய மமதா, இந்திராவின் பேத்திக்காக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications