Dulquer Salman: வசமாக சிக்கிய துல்கர் சல்மான், பிரித்விராஜ்? மோசமான மோசடி! கண்டுபிடித்த மத்திய அரசு! ரெய்டு பின்னணி
திருவனந்தபுரம்: பூடான் வழியாக சொகுசு கார்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்த புகார் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிரித்விராஜ் உள்பட 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் அதன் பின்னணி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் பிரித்வி ராஜ் மற்றும் துல்கர் சல்மான் வசமாக சிக்கி கொண்டனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளாவின் பிரபல நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான். தமிழில் ஓ காதல் கண்மணி, லக்கி பாஸ்கர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராக இருப்பவர் பிரித்விராஜ். இவரும் தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்று கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கேரளா தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மலப்புரம், குட்டிபுரம், திரிச்சூர் உள்பட பல இடங்களில் இந்த சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் சிக்கினர். கொச்சியின் தவராா பகுதியில் உள்ள பிரித்விராஜின் சொகுசு வீடு மற்றும் கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள துல்கர் சல்மானின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பின்னணியில் மிகப்பெரிய மோசடி உள்ளது.
அதாவது இந்தியாவும், பூடானும் அண்டை நாடுகள். இருநாடுகள் இடையே வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் வரும் 2027 ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இதனால் இருநாடுகள் இடையே பல்வேறு பொருட்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி பூஜ்ஜிய வரியில் நடந்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் சிலர் அதனை பயன்படுத்தி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை நேரடியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் அதற்கான வரியை மத்திய அரசுக்கு கார் வாங்குவோர் செலுத்த வேண்டும். இதனை தவிர்க்க ஒரு கும்பல் வெளிநாட்டு கார்களை பூடானுக்கு இறக்குமதி செய்துள்ளது. அதன்பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அந்த வெளிநாட்டு கார்களை பூடானில் இருந்து இந்தியாவுக்கு ஒரு கும்பல் கொண்டு வருகிறது.
அந்த கார்களை 2nd Hand கார்களாக பூடானில் இருந்து ஏலம் எடுத்து இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வரும் கும்பல் அங்கிருந்து போலி பதிவெண்களை வைத்து திரை பிரபலங்கள், பெரிய பெரிய பணக்காரர்களை குறிவைத்து விற்பனை செய்கிறது. இதன்மூலம் மத்திய அரசுக்கு வெளிநாட்டு கார்களுக்கான வரி கிடைக்காமல் போனதோடு, கார் கடத்தும் கும்பல் அதிக விலைக்கு நம் நாட்டை சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத விற்பனை மூலமாக மொத்தம் 100க்கும் அதிகமான கார்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்படியான கார்களை வாங்கியவர்களின் வீடுகளை குறிவைத்து தான் இந்த ரெய்டு தொடங்கி உள்ளது. இதனை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுப்பிடித்த நிலையில் ஆபரேஷன் நும்கூர் (Operation Numkoor)என்ற பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Numkoor என்பது பூடானில் NumKhor என சொல்லப்படும். அதன் அர்த்தம் வாகனம் (Vehicle) என்பதாகும். இந்நிலையில் தான் இன்று நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்வி ராஜ் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.இதனால் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் மத்திய அரசை ஏமாற்றும் வகையில் பூடானில் இருந்து கார் வாங்கி உள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications