சாதி பாகுபாடு? ‛ஜெயிலர்’ பட வில்லன் விநாயகனை கோவிலுக்குள் அனுமதிக்காதது ஏன்? விவாதமான விவகாரம்
திருவனந்தபுரம்: நடிகர் ரஜினிகாந்தின் ‛ஜெயிலர்' படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன் கேரளாவில் கல்பாத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியா வெளியான நிலையில் சாதி பாகுபாட்டால் விநாயகன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நடிகர் விநாயகன். ஏராளமான மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். அதோடு தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் முதல் முதலாக 2006ல் வெளியான நடிகர் விஷாலின் திமிறு படத்தில் நடித்தார். அந்த படத்தில் வில்லி ரோலான ஈஸ்வரி (நடிகை சிரேயா ரெட்டி) கதாபாத்திரத்தின் உதவியாளர் போல் நடித்திருப்பார்.

அதன்பிறகு சிலம்பாட்டம், சிறுத்தை உள்பட பல படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் ‛ஜெயிலர்' திரைப்படத்தில் ‛வர்மன்' என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து நடிப்பில் அசத்தி இருப்பார். தற்போது இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆனாலும் கூட விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த ஆண்டு போலீஸ் நிலையத்தில் போலீசாரை திட்டி ரகளை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் இணையதளங்களில் விநாயகன் தொடர்புடைய வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அந்த வீடியோ என்பது பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி கோவிலில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் விநாயகன் கோவிலுக்குள் செல்ல விரும்புகிறார். ஆனால் அங்கிருப்பவர்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன்பிறகு போலீசார் வந்த விநாயகனிடம் பேசி சமாதானம் செய்கின்றனர்.
இந்த வீடியோ பரவிய நிலையில் சாதியை காரணம் காட்டி நடிகர் விநாயகன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பரவ தொடங்கியது. இது பேசும் பொருளானது. மேலும் பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் தான் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கூறுகையில், ‛‛கல்பாத்தி கோவிலில் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விநாயகன் இரவு 11 மணிக்கு வந்தார். கோவில் கருவறை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் அனுமதிப்பது தொடர்பாக அவருக்கும், கோவிலில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்றபடி சாதி ரீதியிலான எந்த அவமதிப்பும் நடக்கவில்லை'' என்றனர்.












Click it and Unblock the Notifications