விஸ்வரூபமெடுக்கும் "சில்வர்லைன்" திட்டம்.. பிடிவாதம் பிடிக்கும் பினராயி.. குறுக்கே வந்த பாஜக..!
சில்வர் லைன் திட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
திருவனந்தபுரம்: கேரளாவின் சில்வர்லைன் திட்டம் குறித்துதான் தற்போது அனைத்து மாநிலமும் உற்று கவனித்து வருகிறது.. அதென்ன சில்வர்லைன் திட்டம்?
பொதுவாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தி வரும் மாநிலங்களில் முக்கியமானது கேரளா.
பினராயி தலைமையிலான ஆட்சியில், இதுபோன்ற எத்தனை பல நல்ல திட்டங்கள் செயல்வடிவம் பெற்று வருவதை மறுக்க முடியாது.

சில்வர்லைன் திட்டம்
அந்த வகையில், தற்போது அறிமுகமாகி உள்ளது சில்வர்லைன் என்ற திட்டம்.. குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே இந்த திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது என்று பெருமிதமாக சொல்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.. அதாவது, தெற்கே திருவனந்தபுரத்தையும், வடக்கே காசர்கோடு வரை இணைக்கும் மித வேக ரயில் பாதை அமைக்கும் திட்டம்தான் இந்த கே-ரயில் சில்வர்லைன் திட்டத்தின் சாராம்சமாகும்.

யோசனை
இதற்கான யோசனையையும், அறிவிப்பையும் கொண்டு வந்ததே பினராயி தலைமையிலான இடதுசாரி அரசுதான்.. இந்த திட்டத்தின்படி, திருவனந்தபுரம்-காசர் கோடு இடையே ரூ.63,941 கோடி செலவில் 11 மாவட்டங்களை உள்ளடக்கும் 532 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.. ஆனால், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தையும் பிரச்சனையாக்கி வருகினற்ன.. இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், சுற்றுப்புறச்சூழலில் பாதிக்கப்படுவதுடன், மக்கள் வாழ்விடத்தை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளது..

காங்கிரஸ்
எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும், அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றுவதே சிறந்தது என்றாலும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, சில்வர்லைன் திட்டத்தை நிறைவேற்றுவதில் பினராயி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.. ஆனாலும், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறார் பினராயி.

திட்டம்
கண்ணூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இதை பற்றி அவர் சொல்லும்போது, "மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கும்... ஆனாலும் யார் தடுத்தாலும் சில்வர்லைன் திட்டத்தை அரசு செயல்படுத்தும்... இந்த திட்டம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது... தனிப்பட்ட முறையில் கேட்டால் காங்கிரஸ் தலைவர்களும், இந்த திட்டத்தின் அவசியத்தை சொல்வார்கள்" என்றார்..

பாஜக அமைச்சர்
இதனிடையே, மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி. முரளீதரன் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசினார்.. அப்போது, "பினராயி விஜயன் தான் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்... சில்வர் லைன் திட்டம் எந்த வளர்ச்சியையும் தரப்போவதில்லை.. மக்களை இங்குமங்கும் அலையச்செய்து, அவர்களை அங்கிருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிதானே தவிர வேறு இல்லை..

சில்வர் லைன்
அதைவிட முக்கியம், இந்த சில்வர் லைன் திட்டத்துக்கு எந்த ஒப்புதலும் இதுவரை யாரும் வழங்கவில்லை என்று ரயில்வே அமைச்சரே நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார்.. வளர்ச்சி என்ற பெயரில் சில தலைவர்கள் பணத்தை அள்ள பார்க்கிறார்கள்.. அதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள்" என்றார். இப்படி, பாஜக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் வலுவாக எதிர்த்து வந்தபோதிலும், சில்வர் லைன் திட்டத்தை நிறைவேற்றுவதில் பினராயி பிடிவாதமாக இருக்கிறாராம்..!












Click it and Unblock the Notifications