கேரளாவின் சிவப்பு மண்ணை துளைக்குதா "காவி".. அசைக்க முடியாத ஹீரோ பினராயி விஜயன் ஹாட்ரிக் அடிப்பாரா?
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக மட்டும் பார்க்கப்படாமல், இந்திய அரசியலில் இடதுசாரி சித்தாந்தத்தின் இருப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு வாழ்வா சாவா போராட்டமாக உருவெடுத்துள்ளது. 1957-ல் வாக்குச்சீட்டு மூலம் ஒரு கம்யூனிச அரசை உலகிற்கே அறிமுகப்படுத்திய கேரளா, இன்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. இதன் ரிசல்ட் எப்படி இருக்க போகிறது???
கடந்த 10 வருஷங்களாகவே முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆளும் LDF எனப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, கேரளாவில் வலுவான ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற தொடர் வெற்றிகள், பினராயி விஜயனை ஒரு அசைக்க முடியாத தலைவராக மாற்றியுள்ளன. கேரள அரசியலில் பொதுவாக நிலவி வந்த "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம்" என்ற சுழற்சி முறையை உடைத்தெறிந்த இடதுசாரிகள், இப்போது 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று அரியணையில் அமரத் துடிக்கிறார்கள்.
கேரளா பினராயி விஜயன்
அரசின் மக்கள் நலத்திட்டங்களும், நெருக்கடியான நேரங்களில் பினராயி விஜயன் காட்டிய நிர்வாகத் திறனும் அவர்களுக்கு பெரும் பலமாக உள்ளன.
மறுபுறம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் தலைமையிலான UDF ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆக்ரோஷமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 முறையும் ஆட்சியைத் தவறவிட்ட அவர்கள், இந்த முறை ஆட்சி எதிர்ப்பு குரல்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.
அதே சமயம், வழக்கமான 2 முனைப் போட்டியை உடைத்து, தனது வேர்களை ஆழமாகப் பதிக்க பாஜக, ஏகப்பட்ட வியூகங்களை வகுத்துள்ளது.. கடந்த 2 முறை நடந்த தேர்தல்களில், 3வது முன்னணியான பாஜக கூட்டணி கேரளத்தில் பலம் பெற ஆரம்பித்தது.. அப்போதிருந்தே மக்களின் மனங்களிலும் அரசியல் மாற்றம் ஏற்பட தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
இடதுசாரிகளின் கோட்டை
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த தேர்தல் இடதுசாரிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதுதான் இப்போது தேசிய அளவில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி...
ஒருகாலத்தில் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா என இடதுசாரிகளின் கோட்டைகளாகத் திகழ்ந்த மாநிலங்களில், இப்போது கேரளா மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வரும் சூழலில், கேரளாவிலும் ஆட்சி கை நழுவினால், இந்திய வரைபடத்தில் இடதுசாரி ஆட்சி நடைபெறும் மாநிலமே இல்லை என்ற நிலை உருவாகிவிடும்.
தொடக்கப்புள்ளி
இந்தியா முழுவதும் இடதுசாரிகள் ஆளும் மாநிலமே இல்லாத சூழல் உருவாகி, அவர்களின் தேசிய அரசியல் செல்வாக்கு மற்றும் இருப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்... இது அந்த இயக்கத்தின் தேசிய அளவிலான வீழ்ச்சிக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை அரசியல் விமர்சகர்கள் மிக வலுவாகவே முன்வைக்கிறார்கள். ஒருவேளை ஹாட்ரிக் வெற்றி பெற்றால் அது இடதுசாரி அரசியலுக்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை..
அதுமட்டுமல்ல, 1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தேசிய அரசியலின் கவனத்திற்கு கொண்டு வந்த பெருமை கேரளாவுக்கு உண்டு.. அதனால்தான் தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இடதுசாரி இயக்கங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது..
கம்யூனிச இயக்கத்தின் அச்சாணி
சுருக்கமாக சொன்னால், இந்திய கம்யூனிச இயக்கத்தின் அச்சாணியாக இன்று கேரளா விளங்குகிறது. அப்படியிருந்தும்கூட, கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணியுடன் பாஜக கட்சி ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளன.. ராகுல் காந்தி முதல் பலரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதுபோக, தங்கம் கடத்தல் புகார், சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதித்தது மற்றும் கோயில் சொத்துக்கள் தொடர்பான பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் என முதலமைச்சர் பினராயி விஜயன் மீது அடுக்கடுக்கான புகார்களும் உள்ளன.
பாஜக தலைவர்கள்
அப்படியிருந்தும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாநில அரசை தீவிரமாக சாடாமல் மென்மையான போக்கையே கடைப்பிடித்தனர்.. அதாவது ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்து, பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியையும் அதன் செயல்பாடுகளையும் குறிவைத்தே அமைந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது..
இந்த சூழலில்தான் நாளை தேர்தல் நடக்க போகிறது.. தேசிய அளவில் மூழ்கிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் எனும் கப்பலை "கடவுளின் சொந்த தேசம்" மீண்டும் கரையேற்றுமா அல்லது இது கம்யூனிச அரசியலின் சரிவில் கடைசி அத்தியாயமாக அமையுமா என்பதை மே 4-ம் தேதி வெளிவரவுள்ள தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications