கேரளாவிலிருந்து கோவை வழியே கத்தாருக்கு.. 5 குழந்தைகளுடன் காரில் சென்ற பெண்! ஆனந்த் மகிந்திரா சல்யூட்
திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து போட்டி பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் - மும்பை வழியாக கத்தாருக்கு காரிலேயே பயணம் நாஜி நவுஷி என்ற பெண் தனது 5 குழந்தைகளுடன் சாகச பயணம் செய்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் காரில் பயணித்து கத்தாரை சென்றடைந்துள்ளார் இந்தப் பெண். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஆனந்த் மகிந்திரா.
பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தப் போட்டியை உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்தனர்.
இப்படி கத்தாருக்கு குவிந்த ரசிகர்களின் பலரும் தங்கள் கால்பந்து போட்டியைக் காண பல்வேறு சிரமங்களையும் சவால்களையும் சந்தித்தாக கூறி வருகின்றனர்.
காரிலேயே கத்தாருக்கு பயணம்
கால்பந்து போட்டிகள் முடிவு பெற்றாலும் உலக கோப்பை கால்பந்து தொடர்பான சுவாரசிய செய்திகள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், கேரளாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் தனது ஐந்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காரிலேயே கத்தாருக்கு சென்று இருக்கிறார். நாஜி நவுஷி என்ற அந்தப் பெண் தனது மகிந்திரா தார் காரில் கேரளாவில் இருந்து புறப்பட்டு இருக்கிறார்.
மொத்தம் 2,973 கி.மீட்டர்
கோயம்புத்தூரில் இருந்து மும்பை வரை காரில் சென்ற நாஜி, அங்கிருந்து கப்பல் மூலம் ஓமன் சென்று இருக்கிறார். கப்பலில் தனது காரையும் எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார். பின்னர் ஓமனில் இறங்கிய நாஜி தனது பிள்ளைகளுடன் காரில் நெடுந்தொலைவு பயணித்து உள்ளார். மொத்தம் 2,973- கி.மீட்டர் பயணம் செய்துள்ளார். தனது காரிலேயே பெட், கிட்சன் வசதிகளை வைத்திருந்த நாஜி நவுஷி இரவு நேரங்களில் டோல்கேட்கள், பெட்ரோல் பங்குகளில் அருகில் தனது காரை நிறுத்தி ஓய்வு எடுப்பாராம்.
50 நாட்கள் பயணம்
அதன்பிறகு காரில் புறப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். இப்படி 50 நாட்கள் பயணம் சென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா வழியாக கத்தார் சென்றுள்ளார். அர்ஜெண்டினாவின் மெஸ்சியின் தீவிர ரசிகையான நாஜி நவுஷி கால்பந்து போட்டிக்காக இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு யூடியூபரான அவர் தனது பயணம் முழுவதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ஏற்கனவே பலமுறை இதுபோல பயணங்களை மேற்கொண்டு இருக்கிறாராம்.
மகிழ்ச்சி அளிக்கிறது
நாஜி நவுஷியின் இந்த பயணம் குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா சல்யூட் செய்வதாக பதிவிட்டுள்ளார். தனது ட்விட் பதிவில் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:- இந்த விடீயோவை காத்திருந்து பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜெண்டினா & மெஸ்சியின் வெற்றியை போல இவரது தனித்துவமான பயணமும் ஒரு வெற்றிதான். நாஜி நவுஷியின் துணிச்சலான சாகச பயணத்திற்கு நான் சல்யூட் செய்கிறேன். கார் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உலகத்தை பற்றிய ஆர்வத்துடனும் துணிச்சலுடனும் மக்களை மகிழ்விக்கும் ஒரு கார்" என்று பதிவிட்டுள்ளார்.