கருணாநிதி 2.0: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு- தேசிய தலைவராக உருவெடுக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அடியொற்றி சமூக நீதியை நிலைநாட்ட அகில இந்திய அளவிலான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். 1990களில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த, காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க, இந்திய அமைதிப்படையை இலங்கையில் இருந்து விலக்கிக் கொள்ள என தேசிய முன்னணியை உருவாக்கி கருணாநிதி சாதித்த வரலாற்றை நினைவுகூறுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பேரறிஞர் அண்ணா மறைவுக்கு தமிழக முதல்வராக அரியணை ஏறினார் கருணாநிதி. 1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற காலம் தொடங்கி தன் வாழ்நாளில் இறுதிக் கட்டம் வரை இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பேராளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி.

சமூக நீதியை உயிர்மூச்சாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முழு வீச்சில் மேற்கொண்டார் கருணாநிதி. இன்னொரு பக்கம் தேசிய அரசியலில் தமிழகத்தின் காத்திரமான பங்களிப்பை இடைவிடாமல் செய்யவும் அவர் தவறியது இல்லை. 1969-ல் காங்கிரஸ் பேரியக்கம் பிளவுபட்டது. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டாக அக்கட்சி உடைந்தது. அப்போது திமுகவுக்கு 25 எம்.பி.க்கள் இருந்தனர். அந்த சூழலில் இந்திரா காந்தியின் பக்கம் நின்றார் கருணாநிதி. அதுவரை கருணாநிதி குறித்து எதிர்மறையான அதாவது கலகக்காரர் என்கிற கருத்தை கொண்டிருந்தவர் இந்திரா காந்தி அம்மையார்.
1969-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இந்திரா காந்தி நிறுத்திய வேட்பாளரை கருணாநிதி ஆதரித்தார். டெல்லி அரசியலில் தீவிர கவனம் காட்டிய அதே கருணாநிதிதான் 1969-ம் ஆண்டு மாநில சுயாட்சிக்காக, மத்திய- மாநில அரசுகளின் உறவு நிலையை உறுதி செய்வதற்காக ராஜமன்னார் கமிட்டியை அமைத்து இந்தியாவையே அதிரவும் வைத்தார். இந்த ராஜமன்னார் கமிட்டி அளித்த பரிந்துரைகள் மகத்தானவை. இந்தியாவை வலிமையான கூட்டாட்சி ஒன்றியமாக்க, மாநிலங்களிடை கவுன்சில் அமைக்க வேண்டும்; மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ராஜமன்னார் கமிட்டியின் பரிந்துரைகள்.
1975-ல் நாடு முழுவதும் அவசரநிலையை இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த போது அதை கடுமையாக எதிர்த்தார். தம்மை நெருக்கடி காலங்களில் ஆதரித்த கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியை இந்திரா காந்தி அம்மையாரே கலைத்தார். எண்ணற்ற திமுக முன்னோடிகள் ஏன் கருணாநிதியின் மகன் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட அன்றைய எமர்ஜென்சி வேட்டை விட்டு வைக்கவில்லை. மாவீரன் சிட்டிபாபு என போற்றப்படுகிற சென்னை மாநகர முன்னாள் மேயர் சிட்டிபாபுவால் எமர்ஜென்சியின் ஒடுக்குமுறைகளில் உயிர் பிழைத்தார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டும் தளராமல் அரசியலை முன்னெடுத்தார் கருணாநிதி. ஆட்சி அதிகாரம் இல்லாத வனவாச காலத்திலும் அகில இந்திய அரசியலில் எப்போதும் பேசுபொருளாக, மையப் பொருளாக இருந்தவர் கருணாநிதி.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக 1985-ல் டெசோ அமைப்பை உருவாக்கினார் கருணாநிதி. 1986 மே 4-ந் தேதி மதுரையில் அகில இந்திய தலைவர்களான வாஜ்பாய், என்.டி.ராமாராவ், பகுகுணா என பலரையும் அழைத்து வந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் கருணாநிதி. 1990களில் தேசிய அரசியலில் கருணாநிதி ஆகப் பெரும் தவிர்க்க முடியாத விஸ்வரூபம் எடுத்தார். ராஜீவ் காந்திக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய விபிசிங் தலைமையில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் முதல்வர்களை அணிதிரட்டி தேசிய முன்னணியை உருவாக்கிய பிதாமகனாக கருணாநிதி இருந்தார். வி.பி.சிங்கை பிரதமர் நாற்காலியில் அமர்த்தி மத்திய அரசு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது, இலங்கையில் ஈழத் தமிழர்களை நரவேட்டையாடிய இந்திய அமைதிப்படையை திரும்பச் செய்தது என கருணாநிதி சாதித்த சாதனைகள் ஏராளம். அதன்பின்னர் கருணாநிதி இல்லாத தேசிய அரசியல் நிகழ்வு எதுவும் இல்லை.
பரம கொள்கை எதிரியான பாஜக ஆட்சி அமைக்க உதவிக் கரம் நீட்டிய போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் கருணாநிதி. ஆனால் மாநில கட்சித் தலைவரான கருணாநிதியிடம் ராமர் கோவில் விவகாரத்தை எழுப்பமாட்டோம் என வாக்குறுதி கொடுத்தி பொட்டிப் பாம்பாக அடங்கியது அன்றைய தேசிய கட்சியான பாஜக. அதனுடனான கூட்டணி முறிந்த பின்னர் 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் அசைக்க முடியாத அங்கமாகவும் கருணாநிதியும் திமுகவும் இருந்தது. இப்போது கருணாநிதி அடியொற்றி அதே பாதையில் அவரது மகனும் தமிழக முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் பயணத்தில் புதிய பாய்ச்சலை தொடங்கி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளின் கூட்டணிக்கான முயற்சிகளில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மையப் பொருளாகவே இருந்தார். இப்போது ஆளுநர் பதவி ஆட்டுக்கு தாடி என்பதாகட்டும் அனைத்திய சமூக நீதி கூட்டமைப்பை கட்டமைப்பதாகட்டும் தந்தையைப் போல கருணாநிதியின் 2.0வெர்சனாகவே திகழ்கிறார் ஸ்டாலின். அவரது அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காஷ்மீர் ஆதரவு குரல் தருகிறது.. மேற்கு வங்கம் நட்புக் கரம் நீட்டிகிறது.. வடபுலத்து சமூக நீதியாளர்கள் மெச்சுகின்றனர்... சமூக நீதி களப் போராளிகள் கரம் கொடுக்கிறார்கள்.. அதனால்தான் தந்தை போல தேசிய தலைவராக உருவெடுக்கிறார் மு.க.ஸ்டாலின் என்பது நிதர்சனமானது.












Click it and Unblock the Notifications