கும்பக்கரை அருவியில் குளிக்க தடை.. கொடைக்கானல் டூர் போனவர்கள் நம்பவே முடியாத அளவிற்கு மாறிய காட்சி
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளிகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக கும்பக்கரை கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கும்பக்கரை அருவி அமைந்ததிருக்கிறது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வட்டக்கானல், வெள்ளிகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கும்பக்கரை அருவியை பொறுத்தவரை கொடைக்கானல் வரும் பலர் குளித்துவிட்டு செல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சபரிமலை செல்லும் பல பக்தர்கள் குளிப்பதற்காக தினமும் வருகை தருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை சென்ற பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த வாரங்களிளில். வாரவிடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கொடைக்கானல் மலைப்பகுதியிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலையிலும் அருவியில் நீர்வரத்து அதிகமானது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
நேற்று வாரவிடுமுறை என்பதால் தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆசையுடன் அருவியில் குளிக்க படையெடுத்து வந்தனர். ஆனால் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அருவியில் நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதி வழங்கப்படும். அதுவரையில் தடை நீடிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க கும்பக்கரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலை பொறுத்தவரை தொடர் மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நேற்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. அதேபோல் மழை காரணமாக மேல் மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை ஆகிய மலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏனெனில் கொடைக்கானல் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மேல் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
வார விடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரத்தில் அதிக மூட்டம் இருந்தால் வாகனங்களில் சென்றவர்கள் முன்பக்க விளக்குகளை எரியவிட்டப்படி சென்றார்கள். தொடர்ந்து சாரல் மழை மற்றும் கடுமையான குளிருக்கும் இடையே சுற்றுலா பயணிகள் இடங்களை பார்த்தார்கள். தொடர் மழையால் நட்சத்திர ஏரியில் அவ்வப்போது படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications