25 ஆண்டுகள் ஓட்டலில் இலவசமாக தங்கும் வசதி.. சென்னையில் செயல்படும் பிரபல நிறுவனம் மீது போலீஸ் வழக்கு
சென்னை: ரூ.7.50 லட்சம் கட்டினால் ஆண்டுக்கு 15 நாட்கள் என மொத்தம் 25 ஆண்டுகள் ஓட்டலில் இலவசமாக தங்கலாம் என அறிவித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் சென்னையில் செயல்படும் பிரபல நிறுவனத்தின் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 20 வருடங்களில் சுற்றுலா துறையும், சுற்றுலா நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த 10 வருட காலத்தில் சுற்றுலா தொழில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.முன்பு மக்கள் எப்போதாவது வெளியூர்கள் செல்வார்கள், ஓட்டல்களில் தங்குவார்கள்..

இப்போது சர்வ சாதாரணமாக சுற்றுலா செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் வெளியூர் ட்ரிப் போடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். சிலர் ஊட்டி, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, மூணாறு என சுற்றுலா செல்கிறார்கள். சிலர் டெல்லி, மும்பை, ஸ்ரீநகர், சிம்லா, டார்ஜ்லிங், மணாலி, அந்தமான் என சுற்றுலா செல்கிறார்கள். சுற்றுலா செல்வோருக்கு தங்கும் விடுதி உள்பட சுற்றுலா தெடர்பான பல்வேறு வசதிகளை செய்து தர ஏராளமான நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. ஆனால் சில நேரங்களில் மோசடிகளும் நடக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செயல்படும் பிரபல நிறுவனமான 'ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்' என்ற நிறுவனத்தின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி செய்ததாக புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: "ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்' கடந்த 2019-ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து, ரூ.7½ லட்சம் கட்டினால் இந்தியா முழுவதும் உள்ள விடுதிகளில் 25 ஆண்டுகள் தலா 15 நாட்கள் வீதம் கோடை விடுமுறையை கழிக்க இலவசமாக தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, அந்த நிறுவனத்தில் ரூ.7½ லட்சம் பணம் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் அறிவித்தபடி, இலவசமாக தங்கும் சேவையை செயல்படுத்தவில்லை. ரூ.7½ லட்சம் பணத்தையும் ஏமாற்றி விட்டார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது..
இது, தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications