கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. திட்ட அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மகிழ்ச்சியில் பெண்கள்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது.
குடும்பங்களை வளர்த்தெடுக்க காலங்காலமாக உழைத்து வரும் பெண்கள் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களது உழைப்பு காற்றில் கரைந்த கற்பூரம் போல ஆகிவிடுகிறது. எனவே தங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்திற்காக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து பேச தொடங்கின.

அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசி விமர்சிக்க தொடங்கினர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
நிலைமையை கவனித்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைந்தது.

தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது ஏற்கெனவே பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பணத்தை பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் பலரும் அடிக்கடி எழுப்பும் கேள்வி வங்கி கணக்கு குறித்துதான்.
உரிமை தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம். ஆனால் இந்த அக்கவுண்ட் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? என்பதுதான் இந்த கேள்வி. இதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "வங்கி கணக்கு இல்லையெனில் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்' வங்கியில் கணக்கு தொடங்கலாம். இந்த அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.
போஸ்ட்மேன் அல்லது கிராம அஞ்சல் ஊழியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், செல்போன் நம்பர், ஆதார் நம்பரை கொண்டு கைரேகையை வைத்து அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதனையடுத்து இந்த கணக்கில் செலுத்தப்படும் உரிமை தொகையை போஸ்ட்மேன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" என தபால்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் உரிமை தொகை தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக ஒரு கோடி பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும். இந்நிலையில் இந்த 15ம் தேதியன்றே ஒரு கோடி பேருக்கு பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே அதிகாரிகள் இதற்காக தயாராகி வருகின்றனர். இந்த உத்தரவால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications