'புள்ளினங்காள்'.. சென்னையை சுற்றி நேச்சர் போட்டோகிராபி எடுக்க பெஸ்ட் இடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இயற்கையையும், அதன் அங்கமாக இருக்கும் பறவைகள், விலங்குகளையும் போட்டோ எடுக்கும் நேச்சர் போட்டோகிராபி மீது பலருக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் சென்னையில் இதற்கான சரியான இடங்கள் தெரியாமல் பலர் தங்களுடைய ஆசையை மனத்திற்குள் வைத்து புதைத்துவிடுகின்றனர். இனி அப்படி இருக்க வேண்டியதில்லை. சென்னையை சுற்றி நேச்சர் போட்டோகிராபிக்கு ஏற்ற இடங்கள் பல இருக்கின்றன.
இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது பழவேற்காடு ஏரியாகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு ஏரியாக இருக்கும் இதற்கு ஸ்வர்ணமுகி, காலாங்கி மற்றும் ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளிலிருந்து நீர் கிடைக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஏரியில் ஏராளமான பறவையினங்கள் வலசை வருகின்றன. சென்னையிலிருந்து இங்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று மீஞ்சூர் வழியாக செல்வது.

மற்றொன்று காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக செல்வது. காட்டுயிர்களை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த காட்டுப்பள்ளி வழியை பயன்படுத்தலாம். ஆனால் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த வழியாக போகும்போது சில ஓடைகள் குறுக்கிடும். மழை காலங்களில் இந்த வழியாக செல்வதில் சில சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வழி கொடுக்கும் பயண அனுபவம் அலாதியானது. வலது பக்கத்தில் கடலும் இடது பக்கத்தில் முந்திரி தோப்பு என பயணம் ரம்மியமாக இருக்கும்.
போகும் வழியிலேயே பைக் சத்தத்தை கேட்டு சில பறவைகள் பறந்து போவதை காண முடியும். குறிப்பாக அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை கடந்து சென்றால் போகும் வழியெங்கும் இயற்கை உங்களை அன்புடன் வரவேற்கும். இங்குள்ள காடுகளில் பறவைகள் ஒருபுறமும், வலது பக்கத்தில் உள்ள கடற்கரையில் ஆமைகளையும் பார்க்க முடியும். இதைதாண்டி சென்றால் பழவேற்காடு வந்துவிடும். அங்குள்ள ஏரியில் படகு மூலம் சவாரி செய்து சிறு சிறு தீவுகளுக்கு போகலாம்.
அங்கு பூநாரை உள்ளிட்ட 100 வகை பறவை இனங்களை பார்க்க முடியும். சில பறவைகள் அண்டார்டிக்காவிலிருந்து கூட இங்கு வலசைக்கு வருகின்றன. இந்த ஏரி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா வரை செல்கிறது. பறவைகள் மட்டுமல்லாது சில வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்களையும் இங்கே பார்க்க முடியும். இவையனைத்தும் நிச்சயம் ஓர் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். பழவேற்காடு போலவே மற்றொரு இடமும் நேச்சர் போட்டோகிராபிக்கு ஏற்ற இடமாக இருக்கிறது.
பழவேற்காடு பகுதியிலிருந்து சில கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தடா அருவி. சுமார் 800மீ உயரத்தில் அமைந்துள்ள நாகலா மலையில் ஏராளமான காட்டுயிர்கள் இருக்கின்றன. சுமார் 102 சதுர கி.மீ அளவுக்கு பரந்து விரிந்திருக்கும் இந்த மலையில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். இந்த காட்டில் கரடி, மான்கள் போன்றவை இருந்தாலும் கூட ஊர்வன உயிரினங்கள்தான் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக பாம்புகளுக்கு இந்த காடு பெயர் பெற்றதாகும்.
இந்த காடு சிவப்பு மண்ணால் ஆனது என்பதால் இங்கு புதர்களும், மரங்களும் அதிகமாக இருக்கும். குறிப்பாக முட்கள் நிறைந்த செடிகள் அதிகமாக இருக்கும். அதேபோல இங்கு விளையும் மரங்கள் சில விலைமதிப்பற்றவை என்பதால் அவை சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. இந்த காட்டில் மலையேற பலர் வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையையே பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இந்த காட்டில் உள்ள வித்தியாசமான பூக்களின் மணம் மனிதர்களை குழப்பக்கூடியது என்று சொல்லப்படுகிறது. மாற்று பாதையில் சென்றால் இந்த மணம் நம்மை குழப்பி வழி தவற வைத்துவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த காடு இயற்கையை விரும்பும் புகைப்பட கலைஞர்களுக்கு பொக்கிஷம்தான்.
இது தவிர வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கோவளம் கடற்கரை, மாமல்லபுரம், சேத்துப்பட்டு ஏரி, திருவான்மியூர் கடற்கரை, கிண்டி பாம்பு பண்ணை போன்றவையும் இயற்கையை விரும்பும் புகைப்படக்கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகும்.












Click it and Unblock the Notifications