ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளத்தில் மூடப்படும் ரிசார்ட்டுகள்.. அதிரடியாக சீல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் செயல்பட்டு வந்தன. இங்கு செயல்பட்டு வரும் ரிசார்டுகள் தேசிய வன விலங்குகள் வாரியம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த புகாரில் தற்போது சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள் சிறுத்தைப்புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள் என ஏராளமான விலங்குகள் இருக்கிறது. இந்த புலிகள் வனப்பகுதியையொட்டி தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய வனவிலங்கு வாரியம் மலைப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சத்தியமங்கலம் புலிகள் சரணாலத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 4 வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம் ஆகிய பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத விடுதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் சட்டவிரோத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் ஈரோடு கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தங்கும் விடுதிகள் வைத்திருப்போர் வருகிற 13-ந் தேதிக்குள் உரிய அனுமதி பெறவேண்டும். இல்லை என்றால் அவைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றார்கள். இந்நிலையில் இன்று அனுமதி பெறாத ரிசார்ட்டுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications