வண்டியை இப்போது ஊட்டிக்கு விடுங்க.. மழையால் அடியோடு மாறிய கிளைமேட்.. வனத்துறை மகிழ்ச்சி
ஊட்டி: ஒரு மழைக்காக மொத்த மாவட்டமும் ஏங்கி கிடந்தது என்று சொன்னால் நிச்சயம் நம்புவீர்கள்.. ஏனெனில் சென்னையே எப்போது மழை பெய்யும் என்று ஏங்கி கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தான் பலரும் விரும்பி செல்லும் ஊட்டியும் ஏங்கி கொண்டிருந்தது. மற்ற ஊர்களில் மழையை மக்கள் விரும்புவார்கள். ஆனால் ஊட்டியில் மழையை மனிதனை தாண்டி விலங்குகளும், ஏன் அங்குள்ள மரங்களும், செடிகளுமே ஏக்கத்துடன் எதிர்பார்த்தன. வனத்தை சுடுகாடாக்கி கொண்டிருந்த காட்டுத்தீயை காலி செய்ய வருண பகவான் ஒரு வழியாக வந்தார். 3 மணி நேரம் கனமழையால் மொத்த ஊட்டியும் அடியோடு மாறியது. கிளைமேட் மாறியதால் வண்டியை இப்போது ஊட்டிக்கு விடுங்க என்று பலரும் கிளம்பி உள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து விட்டது. இதனால் பலரும் வெயிலில் இருந்து தப்பிக்க நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. சமவெளி பகுதியை போல வெயில் வாட்டியதால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கோடை மழை இல்லாததால் விவசாயிகளும், வனத்துறையினருமே திணறிப்போனார்கள்.

இந்தநிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது, இதன்படி நேற்று முன்தினம் ஊட்டியில் லேசான மழை பெய்தது. நேற்று ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
ஊட்டியில் படகு இல்லம் செல்லும் சாலை, கூட்செட் சாலை, சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் மழைநீர் ஆர்பரித்து சென்றது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். கனமழை காரணமாக சிறிது நேரம் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு பிறகு ஊட்டியில் நல்ல மழை பெய்ததால் வழக்கமான ஜில்லென்ற காலநிலை மீண்டும் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதமான காலநிலையை பலரும் அனுபவித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில்
கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததாலும், பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி செடிகள் அழிந்து வந்தன.
தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கடந்த 2 வாரமாக நீலகிரியில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டது. இந்த மழை காரணமாக காட்டுத்தீ அபாயம் நீங்கி இருக்கிறது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதனிடைய மே1 ம்தேதியான இன்று பலரும் சுற்றுலாவாக ஊட்டிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் ஆர்வமாக செல்கிறார்கள். அப்படி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாறாத அளவிற்கு வானிலை மாறியிருப்பது தான் இப்போதைய ஹைலைட்.














Click it and Unblock the Notifications