கொடைக்கானலை பாதுகாக்க கோட்டாட்சியர் போட்ட அதிரடி உத்தரவு.. சொகுசு விடுதி கட்டுவோருக்கு செக்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஜூலை 1ம் தேதி முதல், அனுமதியின்றி பொக்லைன், போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறலுக்காக கடந்த 2மாதங்களில் 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் கூறினார்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். மிக அழகான கொடைக்கானல், அதே இயற்கை அழகுடன் இருக்க வேண்டும் என்றால், ஊட்டி போல் நகரமயமாகாமல் தடுக்க வேண்டும். அதேபோல் விதிகளை மீறி கண்ட இடத்தில் எல்லாம் சுற்றுலா விடுதிகளையும், சொகுசுவிடுதிகள் கட்டுவதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க நீலகிரியில் உள்ளது போல், பொக்லைன், போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன், போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். கொடைக்கானலில் பல பிரபலங்கள் வீடு வாங்கி போட்டுள்ளார்கள். சில பிரபலங்கள் சொகுசு விடுதிகளை கட்டுகிறார்கள். அவர்கள் கட்டும் விடுதிக்கு பாதை அமைக்க பொக்லைன் பயன்படுத்தியது சர்ச்சையானது. சில விஐபிக்கள் போர்வெல் பயன்படுத்தியதும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தான் அரசின் அனுமதியின்றி பொக்லைன், போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிகளை மீறி மண் அள்ளும் இயந்திரம், பாறைகளை துளையிடும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வாகனங்களை கொடைக்கானலில் இருந்து கீழே இறக்க வேண்டும்.
ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட இந்த வாகனங்களை பயன்படுத்தினால், வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு முறை அபராதம் விதிக்க உள்ளோம். அந்த வாகனத்தை மீண்டும், பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். தடை செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் உதவினால் அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்றார்.
இது ஒருபுறம் எனில், கொடைக்கானலில் கிளைமேட்டை பொறுத்தவரை கடும் குளிர் காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்து கடந்தது. கொடைக்கானல் பியர்சோலா அருவி பகுதிக்கு செல்லும் பிரதான மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதேபோல் அப்பகுதியில் உள்ள 5 உயர் மின்கம்பங்கள் சாலையில் விழுந்து. இதனால் கொடைக்கானலின் பியர்சோலா அருவி பகுதி, கல்லுக்குழி, டிப்போ, கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் நகர தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், எந்திரங்கள் மூலம் ராட்சத மரத்தை அறுத்து அகற்றினர். இதேபோல் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று அறுந்து கிடந்த மின்வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே தொடர்ந்து கொடைக்கானலில் பலத்த காற்று வீசியது. இதன் எதிரொலியாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
இதேபோல் கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து கொண்ட இருந்தது.மாலைப்பகுதி சாலையான தாண்டிக்குடி-பட்லங்காடு பிரிவு இடையே காளான் பண்ணை அருகே ராட்சத மரம் ஒன்று சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிகு அங்கு போக்குவரத்து சீரானது. கொடைக்கானலில் மழைப்பெய்து வருவதால் கிளைமேட் கடும் குளிராகவே நேற்று காணப்பட்டது.












Click it and Unblock the Notifications