குளியலறை, படுக்கையறையில் ரகசிய கேமரா: மூணாறு, இடுக்கி தங்குமிடங்களில் சம்பவம்.. மக்களே உஷார்
தேனி: கேரள மாநிலம் இடுக்கி என்பது மிகப்பெரிய சுற்றுலா மாவட்டம் ஆகும். இங்கு பலரும் சுற்றுலா வருவார்கள்.. இடுக்கி மாவட்டத்தை தான் கேரளாவிற்கு கடவுள் கொடுத்த பரிசாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு அழகான இடங்கள் அதிக அளவில் உள்ளன. உலக புகழ் பெற்ற மூணாறு, தேக்கடி, இடுக்கி அணை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு சில கும்பல்கள் மக்களிடம் நட்பாக பழகி வீடுகளில் நுழைகிறார்கள். பின்னர் குளியலறை மற்றும் படுக்கையறை பகுதிகளில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வீடியோ எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இடுக்கி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடவுளின் தேசம் என்று கேரளா போற்றப்படுவதற்கு இடுக்கி மாவட்டம் மிக முக்கிய காரணம் ஆகும். அவர்கள் இயற்கையை அப்படியே வைத்திருந்தாலும், பல இடங்களில் பணப்பயிரான தேயிலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை அதிக அளவில் பயிரிட்டு உள்ளார்கள்.

அதேபோல் தேனி மாவட்டம் போல் இல்லாமல் முழு வனப்பகுதியையும் சுற்றுலாவிற்கு திறந்துவிட்டுள்ளார்கள். என்ன தான் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை, ஏலக்காய் மற்றும் மலைவாழ் பயிர்கள் என இயற்கை வளம் அதிகம் என்றாலும், சுற்றுலா தான் பிரதான தொழிலாளாக இருக்கிறது.
இடுக்கி சுற்றுலா மாவட்டம்
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, இடுக்கி அணை, கொழுக்குமலை (தமிழ்நாடு என்றாலும் வழி கேரளாவில் தான் உள்ளது), சந்தோம்பாறை, நெடுங்கண்டம், கட்டப்பணை என பல்வேறு இடங்கள் உள்ளன. இதுதவிர இதன் அருகில் தான் வாகமன் உள்ளது. சபரிமலை செல்லவும் பலரும் இடுக்கி மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குவியும் இடமாக இடுக்கி மாவட்டமாக இருக்கிறது. இங்கு தமிழர்கள் பெரிய அளவில் வசிக்கிறார்கள். மூணாறு, வண்டிப்பெரியாறு உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை கேரளா என்று சொல்ல முடியாத அளவிற்கு தமிழர்கள் இருக்கிறார்கள்.
ரகசிய கேமரா
இந்த சூழலில் இடுக்கி உள்ளிட்ட சில மாவட்டங்களில், சில கும்பல்கள் மக்களுடன் நட்பாகப் பழகி வீடுகளுக்குள் நுழைகிறார்கள். பின்னர் குளியலறை மற்றும் படுக்கையறை பகுதிகளில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வீடியோ பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சைபர் கிரைமுக்கு போன புகார்
பின்னர் அந்த வீடியோக்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் வசூலிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு போன புகார்கள் மற்றும் விசாரணையில் விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களைச் சோதித்தபோது, பல பெண்களின் ஆபாசப் படங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
தத்ரூபமாக உருவாக்க முடியும்
இன்றைய சூழலில் பாத்ரூமில் ஒரு பெண் சாதாரணமாக குளித்தாலும், மிக அசிங்கமாககாட்டக்கூடிய அளவிற்கு ஏஐ தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. சாதாரண படுக்கையில் உள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கூட தத்ரூபமாக கேவலமாக மாற்ற முடியும் என்கிற அளவிற்கு தொழில் நுட்பவம் வளர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி தான் ரகசிய கேமராவை பொறுத்தி சில விஷமிகள், மக்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார்களாம். சமூக வலைதளங்கள் வழியாகப் பலரிடம் பணம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிலர், மானத்திற்கு அஞ்சி பலர் போலீசில் புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
போலீசார் எச்சரிக்கை
இது போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குளியலறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் என இடுக்கி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். அதேநேரம் சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல் அறைகளிலும் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் இதுபோன்று முன்பு நடந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications