திருச்சி பக்கத்தில் பீச்.. குறைந்த கட்டணத்தில் கடலிலேயே படகு சவாரி.. தஞ்சை டெல்டாவுக்கே பிடித்த இடம்
திருச்சி: திருச்சி பக்கத்தில் பீச் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆமாங்க திருச்சியில் இருந்து வெறும் 100 கிலோ மீட்டர் தூரத்தில் அருமையான பீச் ஒன்று இருக்கிறது. இங்கு மிக குறைந்த கட்டணத்தில் கடலிலேயே படகு சவாரி போக முடியும். குளித்து மகிழ முடியும். கடற்கரையும் அற்புதமாக இருக்கும். எந்த இடம் என்பதை பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் வங்க கடலின் கடற்கரை அமைந்துள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பிடித்த சிறந்த கடற்கரையாக இருக்கிறது.

இந்த கடற்கரை பட்டுக்கோட்டையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. திருச்சியில் இருந்து 118 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுப்பட்டினம் கடற்கரை இருக்கிறது. திருச்சியில் இருந்து வெறும் இரண்டரை மணி நேர பயணத்தில் அமைந்துள்ள புதுப்பட்டினம் கடற்கரை பலருக்கும் பிடித்த இடமாக இருக்கிறது..
இங்கும் நிலவும் அமைதியான சூழல், அற்புதமான கடற்காற்று, கடற்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, மெல்லிசான அலைகள் என புதுப்பட்டினம் கடற்கரை சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. கோடை விடுமுறை நாட்கள் என்பதால் தற்போது, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் வருகிறார்கள்.
'தஞ்சாவூர் மாவட்ட பீச்' என்று அழைக்கப்படும் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வரும் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கிறார்கள். இங்கு குளிர்பானக் கடைகள், பொம்மைக் கடைகள் என ஏராளமான கடைகள் இருக்கின்றன. இந்த கடைகள் சென்னை கடற்கரைக்கு நிகரான ஷாப்பிங் அனுபவத்தை தரும் என்கிறார்கள். இங்கு குறைந்த கட்டணத்தில் கடலிலேயே படகு சவாரி செல்ல முடிகிறது. பெரியவர்களுக்கு 100 ரூபாயும், குழந்தைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஒரு முறை போய் பாருங்கள்.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.












Click it and Unblock the Notifications