கொடைக்கானல் அடிவாரத்தில் மறைந்திருக்கும் அற்புதம்.. பலருக்கும் தெரியாத இயற்கை நீச்சல் குளம்
தேனி: கொடைக்கானல் டூர் போக பிளான் பண்றீங்களா.. குளிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? பெரியகுளம் பக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாறு என்ற இயற்கை நீச்சல் குளம் இருக்கிறது. இங்கு இப்போதும் போய் குளிக்க முடியும்.. இதுபோன்ற ஒரு அற்புதமான இடத்தில் குளிப்பது பலருக்கு பிடிக்கும். வெயில் எவ்வளவு அடித்தாலும் கவலைப்பட வேண்டாம்.
எவ்வளவு தான் வெயில் அடித்தாலும், சிலுசிலுவென்று ஓடும் ஆறுகளும், பக்கத்தில் ஏராளமான மரங்களும், காடுங்கள் நிறைந்த மலை அடிவாரமாகவும் இருந்தால் அந்த இடம் நிச்சயம் வரம் ஆகும்.. வாழ்க்கையில் சில ஊர்களில் பிறப்பதே வரம்.. அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் பிறந்தவர்களுக்கு உலகில் எங்கு போனாலும், இப்படியான சொர்க்கம் கண்டிப்பாக கிடைக்காது.. கொடைக்கானல் அடிவாரமான பெரியகுளத்திற்கு எல்லாம் சொல்லவா வேண்டும்.. பெரியகுளத்தை சுற்றி சோத்துப்பாளை மற்றும் மஞ்சளாறு என இரண்டு அணைகள் உள்ளன. இதுதவிர ஏராளமான ஆறுகள் உள்ளன. வழுக்குப்பாறைகள், அருவிகள் இந்த பகுதியில் அதிகம்.

இயற்கையான நீச்சல் குளமும் இங்கு இருக்கிறது. பெரியகுளத்தில் இருந்து நேராக கல்லாறு செல்லலாம். இங்கு தண்ணீர் எப்போதுமே இருக்கும். கல்லாறு ஒரு அருவி மட்டுமல்ல.. இயற்கையான நீச்சல் குளமும் கூட.. இயற்கையின் சொர்க்கமாக இந்த இடம் இருக்கிறது. இங்கு செல்ல வேண்டும் என்றால், கல்லாறு வந்த பின்னர் சிறிது தூரம் மாந்தோப்பிற்குள் டிரக்கிங் வர வேண்டும். அப்படி வந்தால் தான் பார்க்க முடியும். நீச்சல் தெரிந்தவர்கள் இயற்கையான நீச்சல் குளம் போல் இருக்கும் பகுதியில் தாவி குதித்து குளிக்க முடியும்..

மற்றவர்கள் அருகில் உள்ள பகுதியில் குளிக்கலாம். எந்த காரணம் கொண்டும் நீச்சல் தெரியாதவர்கள் குளத்திற்குள் குளிக்க வேண்டாம். நீச்சல் தெரியாதவர்களுக்கு மிகவும் ஆபத்து உள்ள இடம் ஆகும். மழைக்காலங்களில் குளிக்கவே முடியாதஅளவிற்கு வெள்ளம் போகும்.

இந்த கல்லாறு எப்படிப்பட்ட இடம் என்றால், கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகைக்கு அப்படியே சுமார் 7000 அடி கீழே உள்ள பகுதியாகும்.. பெரியகுளம் கல்லாறு என்பது தேனி மாவட்ட மக்களுக்கு மிகவும் பிடித்தமான குளிக்கும் இடம் ஆகும். கும்பக்கரை அருவியை விட சூப்பராக இருக்கும்.

இந்த கல்லாறில் உள்ள பிரச்சனை என்னவென்றால், குடித்துவிட்டு பாட்டில்களை கண்ட இடங்களில் வீசியிருப்பார்கள். அந்த பகுதியில் வனத்துறையினர் கடுமையான சோதனை செய்து குடிப்பதை தடை செய்ய வேண்டும்.. பெண்கள் அதிகம் வந்து செல்லும் கல்லாறில் குடிகாரர்கள் வந்து குடிப்பதை தடுப்பதுடன், அவர்கள் பாட்டிலை உடைத்து வீசுவதையும் தடுக்க வேண்டும்..

கொடைக்கானல் செல்பவர்கள், நல்ல அருவியில் குளிக்க வேண்டும் என்று விரும்பினால், தாரளாமாக வத்தலக்குண்டு செல்லாமல் பெரியகுளம் போகலாம்.. அங்கு கும்பக்கரை, கல்லாறு, சின்னியம்பாளையம் ஆறு போன்ற ஆறுகளில் குளித்து மகிழலாம். கோடை மழைக்கு வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கொடைக்கானல் பகுதியில் ஒரு நல்ல மழை வந்தால் போதும். இந்த பகுதி இன்னும் சூப்பராக மாறிவிடும். பெரியகுளம் கல்லாறு ஒருமுறை சென்றுவர அருமையான இடம் ஆகும்.













Click it and Unblock the Notifications