2021 vs 2026.. ஸ்டாலினின் கொடைக்கானல் சென்டிமென்ட்.. 20 ஆண்டுகளில் பல முறை வந்துள்ளார்
கொடைக்கானல்: முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்த ஊர் கொடைக்கானல்.. 20 ஆண்டுகளில் தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும் நேரங்களிலும் அல்லது பெரிய அரசியல் நகர்வுகளுக்கு முன்னரும் ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். ஸ்டாலின் எப்போதெல்லாம் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறாரோ அல்லது ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை முடித்துவிட்டு ஓய்வு எடுக்க நினைக்கிறாரோ, அப்போதெல்லாம் அவரது தேர்வு கொடைக்கானலாகத்தான் இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொடைக்கானல் எப்போதும் ஒரு "ஃபேவரிட்" இடம்தான். கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே ஓய்வெடுக்கவும் அவர் கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை குடும்பத்துடன் அங்கு வந்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்பும் அவர் அங்கு சென்றார், இப்போது 2026 தேர்தல் முடிவுகள் (மே 4) வரப்போகும் இந்தச் சூழலிலும் கொடைக்கானல் பயணம் பேசுபொருளாகிறது. இது ஒருவகையான "வெற்றி சென்டிமென்ட்" ஆகவும் பலராலும் பார்க்கப்படுகிறது.

மற்றவர்கள் தேர்தல் முடிவுகளை நினைத்து பதற்றமாக இருக்கும்போது, அவர் குடும்பத்துடன் கொடைக்கானலில் ரிலாக்ஸாக நடைப்பயிற்சி செய்வது, "நாங்கள் தான் ஜெயிக்கப் போகிறோம்" என்கிற ஒருவிதமான மறைமுகத் தன்னம்பிக்கையை காட்டும் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன், கொரோனா உச்சம் அடைய தொடங்கிய நேரம் அது.. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சில நாட்கள் கொடைக்கானலில் தங்கியிருந்தார். அது பேரன் பேத்திகளுடன் சென்ற சுற்றுலாவாகும். அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தியா முழுக்க லாக்வுடன் அறிவிக்கப்பட்டது தனிக்கதை..
2021க்கு பிறகு சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து கொடைக்கானலுக்கு நான்கு நாட்கள் பயணமாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் சென்றார். முன்னதாக 2019, 2016 தேர்தல் முடிந்த உடனேயும் ஸ்டாலின் கொடைக்கானல் சென்று வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் எப்போதும் ஒரே தனியார் விடுதியில் தங்குவார். பாம்பார்புரத்தில் உள்ள அந்த தங்கும் விடுதி சர்வதேச அளவில் புகழ்பெற்றது ஆகும். கொடைக்கானலுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமல்ல, தனது இளம் வயதிலும் பலமுறை வந்துள்ளார். அவரது மனைவியுடன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். கொடைக்கானல் தட்ப வெப்பநிலை ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டியை போல் கொடைக்கானல் பெரிய நகரம் அல்ல. முழுக்க முழுக்க சுற்றுலா நகரமாகவே இருக்கிறது. தனது பழைய நினைவுகளை அசைபோடும் இடமாகவும் கொடைக்கானலை அவர் பார்க்கிறார்.
ஸ்டாலின் உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். கொடைக்கானல் ஏரிச்சாலையில் அதிகாலையில் நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதேபோல் மற்ற சுற்றுலாத் தலங்களை விட கொடைக்கானலில் அவருக்குப் பழக்கப்பட்ட சில தனியார் தங்கும் இடங்கள் இருப்பதால், பாதுகாப்பான முறையில் குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறார்.
அந்த வகையில் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந் தேதி கொடைக்கானலுக்கு வந்தார். அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நேற்றும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் மற்றும் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பின்னர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்பு ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்தினார். அங்கு இருந்த தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். இந்நிலையில் கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டு சென்றார். இதனிடையே நேற்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கொடைக்கானலில் சமவெளிக்கு நிகராக இருந்த வெப்பநிலை இன்றுதான் சற்று குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால், வானிலை இன்னும் அருமையாக மாற வாய்ப்பு உள்ளது. கொடைக்கானல் அடுத்த வாரம் இறுதியில் வருபவர்களுக்கு உண்மையில் அற்புதமான அனுபவமாக இருக்கும். அதேநேரம் மே 1 என்பதால் கூட்ட நெரிசலுக்கும் சற்று வாய்ப்பு உள்ளது.














Click it and Unblock the Notifications