கொடைக்கானல் போறீங்களா? அப்போ இந்த தேதியை கண்டிப்பா குறிச்சு வச்சுக்கோங்க..! புயல் வேகத்தில் வேலைகள்!
திண்டுக்கல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கோடை விழாவை முன்னரே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் துவங்கி பத்து நாட்கள் கோடைவிழா நடைபெறும். கோடைவிழாவின் துவக்கமாக முதல் இரண்டு நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டு வழக்கம்போல் மே இறுதி வாரத்தில் கோடை விழா துவங்கினால் பத்து நாட்கள் விழா ஓட்டு எண்ணிக்கையான ஜூன் 4ம் தேதிக்கு முதல் நாள் முடிவடைகிறது. இதனால் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே கோடைவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மே 17 ம் தேதி வெள்ளிக்கிழமை கோடை விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று நிறைவுவிழா மே 26 ம் தேதி ஞாயிறுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி மே 17 வெள்ளிக்கிழமை துவங்கி மே 19 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடத்தப்படவுள்ளது. மலர் கண்காட்சி நடைபெறும் பிரையண்ட்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பூக்கள் மே முதல் வாரத்தில் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர உள்ளது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் செய்துவருகின்றனர். கோடைவிழாவில், கொடைக்கானலின் பல்வேறு இடங்களில் சுற்றுலாபயணிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டுப்போட்டிகள், மினி மாரத்தான் போட்டி, நாய்கள் கண்காட்சி, மீன்பிடித்தபோட்டி, படகு போட்டி, படகுகள் கண்காட்சி அணிவகுப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல் நடந்து முடிந்தநிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவடையாததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 4 ம் தேதி வரை தொடர்கிறது. இதனால் இந்த ஆண்டு கோடைவிழாவில் மாநில அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் நடைபெறும் கோடைவிழா, மலர் கண்காட்சி நிகழ்ச்சிகளில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மாநில செயலாளர்கள் மட்டுமே முக்கிய பிரமுகர்களாக பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications