மதுரையில் 22 ஆண்டுகளாக தொடரும் குருசாமி vs ராஜபாண்டி கோஷ்டி மோதலின் நீட்சி- மேலும் ஒரு ரவுடி கொலை!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே நள்ளிரவில் ரவுடி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இளைஞரின் உடலை போலீசார் ஆம்புன்ஸில் ஏற்றுவதைத் தடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே கொல்லப்பட்ட ரவுடி, மதுரை மாநகராட்சி மண்டல குழு தலைவராக இருந்த விகே குருசாமியின் ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த காளீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல அப்பகுதியில் பலருடன் காளீஸ்வரனுக்கு முன்பகையும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு நடமாடிக் கொண்டிருந்த காளீஸ்வரனை ஒரு கும்பல் இலக்கு வைத்து வெட்டி சாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளீஸ்வரன் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார், காளீஸ்வரன் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உறவினர்களோ, காளீஸ்வரனை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் காளீஸ்வரனின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலைகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் போலீசாரும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விகே குருசாமி ஆதரவாளர் காளீஸ்வரன்
தற்பொது கொல்லப்பட்ட தனக்கன்குளம் காளீஸ்ரவன், மதுரை மண்டல குழுவின் முன்னாள் தலைவரான திமுகவை சேர்ந்த விகே குருசாமியின் ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது. திமுகவை சேர்ந்த விகே குருசாமி, அதிமுகவின் ராஜபாண்டி இடையே 2003-ம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. ஒரு போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய இந்த மோதல் தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில் சென்று செட்டிலாகிவிட முயற்சித்த குருசாமியை, அங்கேயும் பின் தொடர்ந்து போட்டு தள்ள ராஜபாண்டி கோஷ்டி முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த மாதம் கூட, விகே குருசாமி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்தும் செய்திருந்தது.
இந்த நிலையில் விகே குருசாமியின் கோஷ்டியை சேர்ந்த காளீஸ்வரன் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications