எப்படி இருந்த மசினகுடி.. பாலைவனம் மாதிரி போயிருச்சே! சுற்றுலா பயணிகள் அந்த பக்கமே போயிடாதீங்க
சென்னை: ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்லக்கூடிய சுற்றுலா தலமாக இருக்கும் மசினக்குடி பசுமை இன்றி காய்ந்து கிடக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாக தகிழ்ந்து வருவது ஊட்டி. சுட்டெரிக்கும் வெயில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்று ஜில் செய்துவிட்டு வருபவர்கள் ஏராளம். அப்படி ஊட்டி செல்பவர்கள் தவறாமல் செல்லும் மிக முக்கிய சுற்றுலா தலம்தான் மசினக்குடி. மைசூர் மற்றும் ஊட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதிதான் மசினகுடி. ஒட்டுமொத்த உலக அழகையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும் நீலகிரி மலைகளில் உள்ள கண்கவரும் மலைப்பகுதி மசினகுடி.

முதுமலை காடுகளின் வழியே சஃபாரி செல்லும்போது கண்ணுக்கு குளிர்ச்சியான ஏராளமான அம்சங்கள் இருக்கும். குறிப்பாக வானுயர்ந்த வன மரங்கள், ரோஸ்வுட், காட்டு இஞ்சி, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் பலவற்றை போன்ற விலை உயர்ந்த பசுமையான தாவரங்களை அதிகமாகக் கொண்டிருக்கும் . பசுமையான காலங்களிலும், இலையுதிர் காலங்களிலும் மரங்களின் இலைகள் சாலைகளில் கொட்டிக் கிடக்க அதை நம் கண்களால் காண அவ்வளவு அழகாக இருக்கும். பருவமழையின் காலத்தில் மசினக்குடி பேரழகாக இருக்கும்.
ஏராளமான வன விலங்குகள், பறவைகள், வன உயிரிழனங்கள் என இங்குள்ள இயற்கை சூழல் பிரம்மிப்பான அனுபவமாக இருக்கும். புலிகள், சிறுத்தைகள், யானைகள், கழுதைப்புலிகள், சோம்பல் கரடிகள், குள்ள நரிகள், சாம்பார் மான், மந்தி, சோலைமந்தி ஆகிய குரங்கு இனங்கள், காட்டுப்பன்றி, காட்டெருது, மலைப்பாம்பு, பறக்கும் பல்லி போன்ற ஏராளமான உயிரினங்கள் இங்கு உள்ளன. இவற்றை ஜீப் சஃபாரியில் காணும் வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமின்றி நீலகிரி மரப் புறா, சாம்பல் - தலைச் சின்னான், ஆந்தை, இருவாய்ச்சி, பாடும் பறவை, மரங்கொத்திகள், குக்கூ, மற்றும் இன்னும் பல பறவை இனங்கள் இந்த காடுகளில் இருப்பதால் பறவை பார்வையாளர்கள் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பெறுவார்கள். இதன் வழியாக ஜீப் சஃபாரி, மோயார் ஆற்றின் வழியாக படகு சவாரி செய்வது இதயத்தை கொள்ளை கொள்ளும் பேரனுபவமாக இருக்கும். இப்படி மசினகுடியின் அழகையும் சுற்றுலா அனுபவத்தையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால், இவையெல்லாம் ஒரு காலத்தில் எப்படி இருந்த மசினகுடி என்று புலம்ப வைக்கும் வகையில் உள்ளது இன்றைய அதன் நிலை. சுற்றுலா வீடியோக்களை வெளியிட்டு வரும் 'செஞ்சி பசங்க' என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவை பார்க்கையில் வாழ்ந்து கெட்ட குடும்பம்போன்று மரங்கள், பயிர்கள் அனைத்தும் காய்ந்து பசுமையின் வாடையே தெரியாத அளவுக்கு வறண்ட பாலைவனம் போன்று காட்சி தருகிறது.
மன அமைதிக்காக மசினகுடி செல்வோர், இலைகள் இன்றி எலும்புக்கூடுகள்போல் காட்சி தரும் அங்குள்ள மரக்கிளைகளை கண்டால் இருக்கும் மன அமைதியும் போய்விடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. குளிர்ந்த காலமே மசினகுடிக்கு சுற்றுலா செல்ல உகந்த நேரம் என தமிழ்நாடு சுற்றுலா துறை கூறியுள்ளது. ஆனால், அந்த பேஸ்புக் பக்கத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு மசினகுடி பக்கமே வரவேண்டாம் என்று கூறி உள்ளார்கள். அந்த அளவுக்கு அதன் சூழல் உள்ளது.












Click it and Unblock the Notifications