ஊட்டியில் தொடங்கிய மலர் கண்காட்சி.. எத்தனை நாட்கள் நடக்கும்! உதகை செல்ல இ பாஸ் வேண்டுமா?
உதகை: உதகையில் 126ஆவது மலர்க் கண்காட்சி இன்று (மே 10) தேதி தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனால் அங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் இருக்கும். இந்த சீசனில் தான் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஊட்டிக்குச் செல்வார்கள்.

அப்படி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அங்கு ஆண்டுதோறும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மலர் கண்காட்சி: இந்தாண்டு லோக்சபா தேர்தல் காரணமாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி ஆகியவை மட்டும் இந்தாண்டு நடைபெறுகிறது.
எப்படி இருந்த ஊட்டி, கொடைக்கானல்.. இப்ப இப்படி ஆகிடுச்சே.. இ பாஸ் நடைமுறையால் தலைகீழ் மாற்றம்
இன்று தொடங்கியது: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126ஆவது மலர் கண்காட்சி இன்று மே 10ஆம் தேதி தொடங்கியது. வரும் மே 20ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு என பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஒரு லட்சம் ரோஜா மலர்கள் மூலம் பிரம்மாண்ட ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு என 10 வகையான அலங்காரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அலங்கார வளைவுகள், ரங்கோலி, வனவிலங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தாண்டு மலர் காண்காட்சி தொடங்கும் இன்று மற்றும் நிறைவடையும் 20ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு மட்டும் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இ பாஸ்: ஊட்டிக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ பாஸ் முறையால் இந்த முறை பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிறு தயக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இந்தச் சூழலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் சுற்றலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications