ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போக பிளான் பண்றீங்களா? நாளை முதல் போறவங்களுக்கு டபுள் ட்ரீட்
சேலம்: கொடைக்கானல், ஊட்டிக்கு பதில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பலர் இப்போது பயணிக்கிறார்கள். சேலத்தில் இருந்து வெறும் ஒரு மணி நேரத்தில் ஏற்காடு செல்ல முடிகிறது. ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே இருக்கும். ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. 29-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் தாராளமாக தற்போது சுற்றுலா செல்லலாம். ஏற்காட்டில் கோடை விழா நாளை தொடங்குகிறது. எனவே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை காடுகள், மனதிற்கு உற்சாகத்தை போட்டிகள் என பல்வேறு விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. திருவிழாவிற்குள் சென்று ஏற்காட்டில் மகிழலாம்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைப்போட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவலும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.
27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 கூடுதல் பேருந்துகளும், 32 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 2 உள்வட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஏற்காடு மட்டுமின்றி, ஊட்டி, மற்றும் கொடைக்கானலிலும் கோடை விழாக்கள் நடந்து வருகின்றன. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடக்கின்றன. அதேபோல் ஊட்டி, கொடைக்கானலில் கிளைமேட்அருமையாக உள்ளது. எனவே பள்ளி தொடங்கும் முன்பு ஒரு முறை சென்று வர விரும்பினால், தாரளமாக போய் வரலாம். நிச்சயம் அருமையான பயணமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications