சீனிவாசா கோவிந்தா.. 1 நாளில் 6 வைணவ தலங்களில் பெருமாள் தரிசனம்! அதுவும் 1000 ரூபாயில்! எப்படி போவது?
சென்னை: தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை சார்பில் ஒரு நாள் வைணவ திருக்கோவில்களின் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் மதிய உணவு, கோவில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஆகியவற்றுடன் ஒரே நாளில் ஆறு வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் இந்த பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலா திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த வகையில் 2025-2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தமிழக சுற்றுலா
தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, "புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோவில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்மிக பயணம்
இந்த ஆண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
வைணவ கோவில்
புரட்டாசி மாத வைணவத் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 20, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற் கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
ஆன்மிகப் பயணம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications